கோவில் 1171 - இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1171
வெற்றிகளை அள்ளித் தரும் இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில்
22.8.2024 வியாழன்
அருள்மிகு சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில்
சாவகச்சேரி [Chavakachcheri]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 19 கிமீ, சாவகச்சேரி 5 கிமீ, கொடிகாமம் 6.5 கிமீ திருநெல்வேலி (இலங்கை) 19 கிமீ
மூலவர்: கந்தசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-கண்டி சாலையில் 19 கிமீ தொலைவில் சாவகச்சேரி நகரம் அருகில் உள்ள சங்காத்தனை கிராமத்தில் வெற்றிகளை அள்ளித் தரும் சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. சாவகச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 5 மீ தொலைவு அல்லது கொடிகாமம் கிராமத்திலிருந்து 6.5 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் கந்தசுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 09.06.2023 அன்று நடைபெற்றது. சங்கத்தானையில் வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் சாவகச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மஹோற்சவம் 12 தினங்கள் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம், பின்னர் மாம்பழத் திருவிழா, மஞ்சத்திருவிழா, கைலாய வாகன திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பர திருவிழா, தேரோட்டம், தீர்த்தத் திருவிழா, திருக்கல்யாணம், கடசி நாள் பைரவர் பூஜை என திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா இக்கோவிலில் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சாவகச்சேரி சங்கத்தானையில் ஆரம்பத்தில் வைரவசுவாமி கோவிலாக அமையப் பெற்றிருந்தது. பின்னர் ஒரு சமயம் வைரவசுவாமி பக்தர் ஒருவரின் ஊடாக அருள்வாக்கில் தனது வலது பக்கத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியிருந்தார். அதனை அடுத்து முருகனுக்கு சந்நிதி அமைத்து தற்போது வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலை மையப்படுத்தி அறநெறிப் பாடசாலை, ஜன சமூக நிலையம், முன் பள்ளி, விளையாட்டுக் கழகம் போன்றன செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவாலயம் அருட்கவி விநாசித்தம்பி ஐயா அவர்களினால் “குட்டி நல்லூர்” எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது சிறப்பம்சமாகும். கந்தசுவாமிக்கு ஒரு அழகிய சித்திரத் தேர் செய்யப்பட்டு 14.7.2015-ல் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் திருமஞ்சன வாகனம் புதியதாக செய்யப்பட்டு திருமஞ்சம் வெள்ளோட்டம் 28.6.2024-ல் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2022-2023-ல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளபட்டு, 09.06.2023-ல் மகா கும்பாபிஷேம் விமரிசையாக நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளது. கருவறையில் மூலவராக கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் அற்புத காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கந்தனுக்கு முன் வேல் ஒன்று உள்ளது. மற்றொரு கருவறையில் பைரவர் திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், உற்சவ மூர்த்திகள், சிவபெருமான், அம்பாள், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆனி மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வெற்றிகள் பெற்றிட, சங்கடங்கள் தீர, வேண்டியது நிறைவேற, திருமணத் தடை அகல, குழந்தை வேண்டி, வினைகள் நீங்க, நல்லன நடைபெற, மன நிம்மதி பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் யாவும் தீர்க்கும் இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமியை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1171 வெற்றிகளை அள்ளித் தரும் இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை கந்தசுவாமி
Comments
Post a Comment