கோவில் 378 - திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-378
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவில்
21.6.2022 செவ்வாய்
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில்
பெரும்பேடு-601204
திருவள்ளூர் மாவட்டம்
இருப்பிடம்: கோயம்பேடு-கோவில் 45 கிமீ, பொன்னேரி 9 கிமீ
அலைபேசி: 9444160766
மூலவர்: முத்துக்குமார சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 9 கிமீ தொலைவில் பெரும்பேடு என்னும் ஊரில் அமைந்துள்ள முத்துக்குமார சுவாமி கோவில், சிறுவாபுரி மற்றும் ஆண்டார்குப்பம் முருகன் கோவில்களைப் போலவே சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.
இக்கோவிலில் முருகப்பெருமான் சுயம்புவாக 6 அடி உயரத்தில் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மேலும் இத்தலத்தில் மட்டுமே முருகப்பெருமானின் தேவியர் வள்ளி, தெய்வானை இடம் மாறி வீற்றிருப்பது சிறப்பம்சம். வள்ளி குறத்தி வடிவில் இருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோவிலில் கால பைரவருக்கும், நவக்கிரகங்களுக்கும் இடையில் ஒரு சிறிய் முருகன் சிலை உள்ளது. இந்த இடத்திலிருந்துதான் முருகப்பெருமான் சுயம்புவாக வள்ளி, தெய்வானையோடு கிடைத்ததாக கூறுகின்றனர்.
கோவிலுக்கு முன் அரசமரமும், வேப்பமரமும் இணைந்து ஒருங்கே விநாயகருடன் இருப்பது சிறப்பு. இந்த மரத்தை சுற்றி வருபவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் பக்தர்கள் 5/6/11 வாரம் செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து செவ்வேளை (இன்று செவ்வாய்) வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
தலவரலாறு:
700 ஆண்டுகள் பழமையான தலம். 03.06.1976-ல் ஊர் பணிக்காக மண்ணை சீராக்கிய சமயத்தில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சிலைகள் சுயம்பாக கிடைத்தது. முருகப்பெருமான் மீது பக்திக் கொண்ட ஊர் மக்கள் இந்த இடத்திலேயே கோவிலை எழுப்பி முருகப்பெருமானை முத்துக்குமார சுவாமியாக வணங்க ஆரம்பித்தார்கள்
தல அமைப்பு:
திருக்கோவிலுக்குள் நுழையும் போது அரசமரமும், வேப்பமரமும் இணைந்து இருக்க அடியில் ஆதிப் பிள்ளையார், அம்மன், நாகர் அருளுகின்றனர். கோவிலின் தென் மேற்குப் பகுதியில் முத்து விநாயகர் சந்நிதி உள்ளது, கோவில் கருவறையில் மூலவராக சுயம்பு உருவான 6 அடி உயர முத்துக்குமார சுவாமி ஒரு கையில் கமண்டலம் கொண்டு பிரம்ம சாஸ்தா வடிவில் பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்றார். முருகப்பெருமான் தன் இருபுறமும் வள்ளி, தெய்வயானை வீற்றிருக்க அருள்பாலிக்கின்றார். தெய்வயானை வள்ளி இடம் மாறி நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அதிசய கோவிலாகும். முருகபெருமான் இடப்புறத்தில் வள்ளி குறத்திக் கொண்டையுடன் குறத்தி வடிவில், தாமரைக்கு பதில் நீலோத்பவ மலர் ஏந்தியும், வலப்புறத்தில் தெய்வானை மகர குண்டலம், கடி முத்திரையுடன் தாமரை மலர் ஏந்தியும் அருள்வதி சிறப்பு.
மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில், சிவன் மற்றும் பார்வதி சந்நிதிகள் உள்ளன. மேலும் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள், கால பைரவர் என அனைத்து தெய்வங்களும் சிறப்பாக காட்சியளித்து அருளுகின்றனர்.
திருவிழா:
சித்திரை மாத சித்திரை நட்சத்திர பெருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, வெள்ளி
பிரார்த்தனை:
நேர்மறை எண்ணங்கள் உண்டாக, திருமணப்பேறு, குழந்தை பாக்கியம் வேண்டி, விருப்பங்கள் நிறைவேற, செவ்வாய் தோஷம் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 4.30-7.30
பெரும்பேடு முத்துக்குமார சுவாமி மனக்கண்ணால் தரிசித்து வணங்கினால், பக்தகளின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 🙏🙏
படம் 1 - நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவிலில் முருகன் சுயம்பு வடிவில் கிடைத்த இடம்
படம் 2 - விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றும் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி
Comments
Post a Comment