கோவில் 1087 - திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1087
குழந்தை வரம் தந்தருளும் திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன் கோவில்
30.5.2024 வியாழன்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM001961]
[அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்]
சின்னகாவணம்
பொன்னேரி-601204
திருவள்ளூர் மாவட்டம்
இருப்பிடம்: பொன்னேரி 2 கிமீ, சென்னை சென்ட்ரல் 38 கிமீ, கோயம்பேடு 39 கிமீ
மூலவர்: பாலமுருகன் (பாலசுப்பிரமணிய சுவாமி)
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி தெய்வானை
பழமை: 600 ஆண்டுகள்
தல மகிமை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகரிலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் சின்னகாவணம் கிராமத்தில் குழந்தை வரம் தந்தருளும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சின்னகாவணம் பாலமுருகன் கோவிலை அடையலாம். 600 ஆண்டுகள் பழமை மிகுந்த இக்கோவிலில் பாலமுருகன் மூலவராக காட்சி அருள்கின்றார். இவருக்கு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயரும் உண்டு. எனவே இக்கோவிலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் மிகவும் பழமையானதால் பாலமுருகனுக்கு முன்னால் மயில் இல்லை. அதற்கு பதில் யானை இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா ஆறு நாட்கள் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன. ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர திருநாளிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இங்கு வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகருக்கு மாத சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றன. இத்திருத்தலம் குழந்தை வரம் வேண்டும் தம்பதியருக்கு சிறந்த பரிகார தலமாக திகழ்கின்றது.
தல வரலாறு:
இத்திருத்தலம் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு கணக்கு பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்களால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்து அறநிலையத் துறை இக்கோவிலை நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
இத்தலம் தெற்கு நோக்கிய சிறிய கோபுர அமைப்புடன் அழகிய சுதை சிற்பங்களை கொண்டுள்ளது. இத்திருத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் மட்டுமே உள்ளன. ஆலய கோபுரத்தை கடந்து சென்றதும், இடதுபுறம் முதலில் சிந்தாமணி விநாயகர் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். சிந்தாமணி விநாயகர் பக்தர்கள் கேட்கும் வரங்களை அருளும் சக்தி வாய்ந்தவர்.
கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் அற்புதமாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.. பக்தர்கள் இவரை பாலசுப்பிரமணிய சுவாமி என்றும் அழைக்கிறார்கள். இவரின் சந்நிதிக்கு நேரெதிரே வழக்கமாக காணப்படும் மயில் இல்லை. மாறாக திருத்தணி முருகன் கோவிலில் உள்ளது போலவே யானை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பாலமுருகனை வேண்டி வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழா:
கந்த சஷ்டி,பங்குனி உத்திரம், தைப்பூசம், விநாயக சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
குழந்தை வரம் வேண்டி, ஆனந்தம் பெற, நினைத்தது நிறைவேற, கஷ்டங்கள் அகல, நோய்கள் குணமாக, விவசாயம் செழிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6.30-10.30 மாலை 5-8
ஆனந்தம் அருளும் திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1087 குழந்தை வரம் தந்தருளும் திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன்
படம் 2 - 1087 ஆனந்தம் அருளும் திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன் கோவில் சிந்தாமணி விநாயகர்
Comments
Post a Comment