கோவில் 1027 - திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1027

குழந்தை வரம் தந்தருளும் திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.3.2024 ஞாயிறு


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வடக்கு தெரு

பரவாக்கோட்டை-614015

மன்னார்குடி வட்டம்

திருவாரூர் மாவட்டம்

இருப்பிடம்: மன்னார்குடி 12 கிமீ

செல்: திரு G. சுதாகர் 77086 72991


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மன்னார்குடியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பரவாக்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் குழந்தை வரம் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். மார்கழி மாதம் சூரிய ஒளி மூலவர் மீது ஒளிர்வது இக்கோவிலின் சிறப்பு நிகழ்வு.


இக்கோவிலில் சிவசக்தி ஆதிக்கம் இருப்பது சிறப்பம்சம். இக்கோவில் வளாகத்தில் மகா வில்வ மரம், மூன்று முக ருத்ராட்சர மரம், கல்லால மரம், கடம்ப மரம் போன்ற பல ஆன்மீக மரங்கள் இருப்பது பக்தர்களுக்கு நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.


இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. திருநாளன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வருகின்றனர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரங்களுடன் தீபாரதனைகள் நடைபெறுகின்றன. பின்னர் மகா அன்னதானம் நடைபெறும். மேலும் தைப்பூசம், சித்ரா பௌர்ணமி திருநாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் உத்திராபதி தேவர் என்ற தீவிர முருக பக்தர் வேல் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார். பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்ததால், ஓலைக் குடிசை எழுப்பப்பட்டு மகானின் சந்நிதியினர் கோவிலை நிர்வகித்து வந்தனர். தற்போது நிர்வகித்து வரும் முருக பக்தர் சுதாகர் அவர்கள் (பரம்பரை வழி) உள்ளூர் பக்தர்கள் பேருதவியுடன் கோவிலை புனரமைத்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 25.03.2010-ல் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் சைவ பக்தர் சுதாகர் அவர்கள் திருக்குற்றாலம் ஐந்தருவி அருகில் சாரதா தேவி திருக்கோவிலில் சக்தியின் அருளாக் ஞான காளிகாம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்து கடந்த 05.04.2023-ல் கும்பாபிஷேம் நடைபெற்றது என்பது சிறப்பு செய்தி.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய இக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வேல், சேவற்கொடி ஏந்தி மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலில் விநாயகர் அருள்கின்றார். எதிரே மயில், பலிபீடம் உள்ளன. மேலும் மூலவர் எதிரே இடும்பன் வீற்றிருப்பதும் இக்கோவிலின் சிறப்பம்சம்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

குழந்தை வரம் வேண்டி, திருமணத்தடை அகல, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, பிணிகள் அகல, கேட்டது கிடைக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்களிய சென்னி மேல் சூட்டி வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1027 குழந்தை வரம் தந்தருளும் திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1027 நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி













Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்