கோவில் 995 - ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-995 [திருப்புகழ் தலம்]
ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியருளும் ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
28.2.2024 புதன்
அருள்மிகு கரபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
[கரபுரம்]
திருப்பாற்கடல்-632508
ராணிப்பேட்டை மாவட்டம்
இருப்பிடம்: காவேரிப்பாக்கம் 1 கிமீ, ராணிப்பேட்டை 17 கிமீ
மூலவர்: கரபுரீஸ்வரர், கரபுரநாதர்
அம்பாள்: அபிதகுஜாம்பாள்
திருப்புகழ் நாயகர்: ஆறுமுகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வமரம்
புராணப்பெயர்: கரபுரம்
பாடியவர்: அருணகிரிநாதர் (3)
தல மகிமை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை-வேலூர் சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 1 கிமீ-ல் தொலைவில் இருக்கும் திருப்பாற்கடல் [கரபுரம்] திருத்தலத்தில் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியருளும் கரபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராணிப்பேட்டையிலிருந்து 17 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்தலத்தை அடையலாம். இக்கோவிலில் கரபுரீஸ்வரர் அபிதகுஜாம்பாள் சகிதம் அருளாட்சி புரிகின்றார். இத்திருத்தலம் திருநாவுக்கரசர் தேவார வைப்புத்தலமாகும். மேலும் திருப்பாற்கடல் திருத்தலத்தில் மற்றொரு சிவபெருமான் கோவிலும், இரண்டு பெருமாள் கோவில்களும் இருப்பது சிறப்பம்சம். ஒன்று பள்ளிக்கொண்ட பெருமாள் (ரங்கநாதர்) கோவில். மற்றொன்று கோவில் பிரசன்ன வேங்கடேசர் கோவிலாகும்.
அருணகிரிநாதர் கரபுரத்து ஆறுமுகப்பெருமானை போற்றி மூன்று திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இத்தல திருப்புகழ் பாக்களில் நிலவளத்தையும், முருகப்பெருமான் அருள்வலத்தையும் குறிப்பிடுகின்றார். “ஒருவரைச் சிறுமனை”, “குலைய மயிரோதி”, “பரவி உனது பொற்கரமும்” என்று பாடல்களை தொடங்கி சிறப்புற பாடுகின்றார்.
தல வரலாறு:
இக்கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு இரண்டாம் பராந்தகனது படைத்தலைவன் பார்த்திவேந்திராதிவர்மன் (கிபி 957-970) காலத்தது. இதில சிவபெருமான் கரபுரத்துப் பெருமான அடிகள் என்று குறிப்பிடப்படுகின்றார். இங்கு காணப்படும் கல்வெட்டு சான்றுகளிலிருந்து இத்தலத்தை கரபுரம் என்று உறுதியாகக் கொள்ளலாம்.
தல அமைப்பு:
கிழக்கு நோக்கிய இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகள் உடையது. அடுது பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளன. கருவறையில் மூலவர் கரபுரீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பாள் அபிதகுஜாம்பாள் அழகு தோற்றத்துடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். மேலும் சங்கடஹர கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு (அமர்ந்த நிலையில் பிரயோக சக்கரம் ஏந்தி), பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், அருணகிரிநாதர், சனீஸ்வரர், ஜேஸ்டா தேவி, நாகர்கள், கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றார்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகப்பெருமான் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக அற்புத கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவரும் தேவியருடன் அழகிய கோலத்தில் அருள்புரிவது சிறப்பு.
திருவிழா:
மகா சிவராத்திரி, மாசிமகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
ஆபத்துகளில் இருந்து காக்க, மன நிம்மதி கிடைக்க, வேண்டும் வரம் கிடைக்க, சகல நன்மைகளும் உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
மன நிம்மதி கிடைக்க அருளும் ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் மற்றும் ஆறுமுகப்பெருமான் மனமுருகி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 995 ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியருளும் ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
படம் 2 - 995 மன நிம்மதி கிடைக்க அருளும் ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கரபுரீஸ்வரர்
வெற்றிவேல் முருகன்க்கு அரோஹரா 🙏🙏🙏
ReplyDelete