கோவில் 994 - ராணிப்பேட்டை முள்வாய் முருகப்பெருமான் திருக்கை வேல் தலம்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-994 [திருப்புகழ் தலம்]
முன்வினைகள் தீர்க்கும் ராணிப்பேட்டை முள்வாய் முருகப்பெருமான் திருக்கை வேல் தலம்
27.2.2024 செவ்வாய்
அருள்மிகு முருகப்பெருமான் திருக்கை வேல் தலம்
திருப்புகழ் தலம்
முள்வாய்-631210
அரக்கோணம் வட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
இருப்பிடம்: அரக்கோணம் 10 கிமீ, திருவாலங்காடு 6 கிமீ, கோணலம் 5 கிமீ
மூலவர்: முருகப்பெருமான் வேல்
வேறு பெயர்: முள்வாய்ப்பாளையம் (தற்போதைய பெயர்)
பாடியவர்: அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணத்திலிருந்து 10 கிமீ-ல் தொலைவில் இருக்கும் முள்வாய் [தற்போதைய பெயர்- முள்வாய்ப்பாளையம்] திருத்தலத்தில் முன்வினைகள் தீர்க்கும் முருகப்பெருமான் வேல் அமைந்துள்ளது. திருவாலங்காடு திருத்தலத்திலிருந்து 6 கிமீ அல்லது கோணலம் கிராமத்திலிருந்து 5 கிமீ பிரயாணம் செய்தாலும் திறந்த வெளியில் முருகப்பெருமான் திருக்கை வேல் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தை அடையலாம். முன்பொரு சமயம் அருணகிரிநாதர் பரவிய இத்தலத்தைப் பேணி காக்க முருக பக்தர்கள் கோவில் ஒன்று கட்ட முருகப்பெருமானிடம் விண்ணப்பம் வைத்துள்ளார்கள். இத்தலத்திற்கருகில் கிருஷ்ணர் கோவில் மற்றும் புதிய விநாயகர் கோவில் மட்டுமே உள்ளது.
அருணகிரிநாதரால் முள்வாய் முருகனை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “மின்னார் பயந்த மைந்தன்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் “முள்வாய் விளங்க நின்ற பெருமாளே” என்று அருணகிரிநாதர் போற்றி பாடுகிறார். இத்தலத் திருப்புகழில் குழலூதும் கிருஷ்ணர் பெருமையையும் பேசுகிறார்.
தல வரலாறு:
திருப்புகழ் அறிஞர் வலையப்பட்டி கிருஷ்ணன் ஐயா அவர்களால் கண்டறியப்பட்ட இத்தலத்தின் ஒரு பகுதி நீரால் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் மக்கள் வசித்த காலத்தில் கோவில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை இவ்வூர் மக்கள் காட்டுகிறார்கள். இத்தலத்தில் ஒரு சிவாலயம் ஒன்று இருந்து பின்னர் இவ்வூரின் தாழ்வான பகுதியோடு ஆலயமும் புதையுண்டு போயிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வலையப்பட்டி கிருஷ்ணன் ஐயாவும் தரவுகளோடு தந்து நூலில் குறிப்பிடுகின்றார்.
தல அமைப்பு:
முள்வாய் திருத்தலத்தி திறந்த வெளியில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமானின் திருக்கை வேல் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு மூலவராக அருள்பாலிக்கின்றது. அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணரின் திருவுருவப்படமும், விநாயகர் கோவிலில் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இவ்விடத்தில் அகழ்வாய்வு செய்தால் விவரங்கள் தெரியவரும்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
முன் வினைகள் தீர, நல்லன நடக்க, வேண்டியது கிடைக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
நல்லன நடக்க அருளும் முருகப்பெருமான் திருக்கை வேலாயுதத்தை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 994 முன்வினைகள் தீர்க்கும் ராணிப்பேட்டை முள்வாய் முருகப்பெருமான் திருக்கை வேல் [திருப்புகழ் தலம்]
படம் 2 - 994 நல்லன நடக்க அருளும் முருகப்பெருமான் திருக்கை வேல் தலம் விநாயகர் கோவில்
Comments
Post a Comment