கோவில் 993 - திருவண்ணாமலை பொன்னூர் திருக்காமேசுவரர் கோவில் ஆறுமுகர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-993 [திருப்புகழ் தலம்]

அனைத்துப் பிரார்த்தனைகளயும் நிறைவேற்றும் திருவண்ணாமலை பொன்னூர் திருக்காமேசுவரர் கோவில் ஆறுமுகர்

26.2.2024 திங்கள்


அருள்மிகு திருக்காமேசுவரர் திருக்கோவில் [TM024679]

திருப்புகழ் தலம்

[தமனியப்பதி]

பொன்னூர்-604408

வந்தவாசி வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: வந்தவாசி 10 கிமீ


மூலவர்: திருக்காமேசுவரர், பராசரேஸ்வரர், பிரம்மேஸ்வரர், திருப்பிரமீசர், திருக்காமேஸ்வரர்

அம்பாள்: சாந்தநாயகி

திருப்புகழ் நாயகர்: ஆறுமுகர்

தல விருட்சம்: கொன்றை

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்

புராணப்பெயர்கள்: தமனியப்பதி, பிரம்மபுரி, சுவர்ணபுரி

பாடியவர்: அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வந்தவாசியிலிருந்து 10 கிமீ-ல் தொலைவில் இருக்கும் பொன்னூர் [தமனியப்பதி] திருத்தலத்தில் அனைத்துப் பிரார்த்தனைகளயும் நிறைவேற்றும் திருக்காமேசுவரர் கோவில் அமைந்துள்ளது. பராசர முனிவர், பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பராசரேஸ்வரர், பிரம்மேஸ்வரர், திருப்பிரமீசர் என்ற திருப்பெயர்களும் உண்டு. இத்தலத்தின் புராணப்பெயர் தமனியப்பதி ஆகும்.


ஒரே கோவில் வளாகத்துக்குள் கிழக்கு நோக்கியவாறு சிவபெருமான் (திருக்காமேசுவரர்) சந்நிதியும், மேற்கு நோக்கியவாறு பெருமாள் (மகாவிஷ்ணு) சந்நிதியும் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். சுந்தரப்பெருமானின் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. சுந்தரர் இத்தல சிவபெருமானை ‘பொன்னார் நாட்டு பொன்னார்’ என்று போற்றுகின்றார். சபா மண்டபத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு சிவபெருமானையும், அம்பிகையையும் ஒரு சேர தரிசிக்கலாம். பிரம்மாவுக்கு பொன்னன் என்ற பெயர் உண்டு. பிரம்மா இத்தல இறைவனை பூஜித்ததால் பொன்னன் ஊர் என்பது பொன்னூர் என்று மருவியதாக வரலாறு. கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. தமனியம்பதி என்ற பொன்னூரை சுற்றி கீழ்வெள்ளியூர், பாதிரி (ஈயம்), செம்பூர், செம்பேடு (செம்பு), இரும்பேடு ஆகிய ஐம்பொன் பெயர்கள் கொண்ட ஊர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமனியம் என்றால் பொன் என்று பொருள்.


அருணகிரிநாதரால் தமனியப்பதி என்று போற்றப்படும் இத்தலத்து ஆறுமுகனை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “விலையறுக்கவும்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் “வரிசை பெற்றுயர் தமனியப்பதி ……….. பெருமாளே”. என்று அருணகிரியார் போற்றிப் பாடுகிறார்.


தல வரலாறு:

ஒரு முறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்களுக்கு சென்று, தன் தோஷம் நீங்க சிறப்பு பூஜைகள் செய்தார். அவரது தோஷம் நீங்கிய சிவாலய திருத்தலங்களில் இத்தலமும் ஒன்று. பிரம்மாவுக்கு பொன்னன் என்ற பெயர் உண்டு. எனவே இந்த ஊர் பொன்னூர் என்றும், இத்தல இறைவன் பிரம்மேஸ்வரர், திருப்பிரமீசர் என்றும் அழைக்கப்படுகின்றார். இச்சிவாலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. சம்புவராய மன்னர்கள் கோவிலை சீரமைத்துள்ளனர். விஜயநகர மன்னர்கள் காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு, கோவில் விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து மன்னர்களது கல்வட்டுகளும் உள்ளன.


தல அமைப்பு:

இக்கோவிலில் அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம் உள்ளன். கருவறையில் மூலவர் திருக்காமேசுவரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூலவருக்கு எதிரில் பலிபீடமும், அதிகார நந்தியும் உள்ளன. அம்பிகை சாந்தநாயகி தனி சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். அம்மை, அப்பன் இருவரையும் ஒரே இடத்தில் நின்று ஒரு சேர தரிசிக்கலாம். கோவிலின் வடக்கு சுற்றில் கிணறு ஒன்று உள்ளது. அதற்கு மேற்கே மகாவிஷ்ணு 7 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கின்றார். அழகர் பெருமாள், விண்ணகரப்பெருமாள் என்ற திருப்பெயர்களும் உண்டு. மேலும் விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

இத்திருக்கோவில் சபா மண்டபத்தில் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆறுமுகப்பெருமான் பின்புறம் திருவாச்சியுடன் சேர்ந்து ஒரே கல்லில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவியர் இல்லை.


திருவிழா:

மகா சிவராத்திரி, மாசிமகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேற, வினைகள் அகல, தோஷங்கள் நீங்க, உடல் நலன் உண்டாக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-8


வினைகள் யாவும் அகற்றும் திருவண்ணாமலை பொன்னூர் திருக்காமேசுவரர், ஆறுமுகர் திருத்தாள்கள் பணிந்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 993 அனைத்துப் பிரார்த்தனைகளயும் நிறைவேற்றும் திருவண்ணாமலை பொன்னூர் திருக்காமேசுவரர் கோவில் ஆறுமுகர்


படம் 2 - 993 வினைகள் யாவும் அகற்றும் திருவண்ணாமலை பொன்னூர் திருக்காமேசுவரர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்