கோவில் 992 - திருவண்ணாமலை 12 புத்தூர் சோமநாதர் மடம் வித்யாபதீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-992 [திருப்புகழ் தலம்]
வழக்கிலிருந்து விடுபட அருளும் திருவண்ணாமலை 12 புத்தூர் சோமநாதர் மடம் வித்யாபதீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர்
25.2.2024 ஞாயிறு
அருள்மிகு வித்யாபதீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
[சோமநாதர் மடம்]
12 புத்தூர்-632512
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: தாமரைப்பாக்கம் 5 கிமீ, ஆரணி 11 கிமீ
மூலவர்: வித்யாபதீஸ்வரர்
அம்பாள்: அட்சரவல்லி
திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
புராணப்பெயர்கள்: சோமநாதர் மடம், சோமநாதன் மடம், ஐயன்புத்தூர்
பாடியவர்: அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு-ஆரணி சாலையில் இருக்கும் தாமரைப்பாக்கம் என்னும் ஊரில் இருந்து 5 கிமீ-ல் தூரத்தில் உள்ள 12-புத்தூர் [சோமநாதர் மடம்] திருத்தலத்தில் வழக்கிலிருந்து விடுபட அருளும் வித்யாபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து 11 கிமீ பிரயாணம் செய்தாலும் சோமநாதர் மடம் எனும் 12 புத்தூர் வித்யாபதீஸ்வரர் கோவிலை அடையலாம். வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
அருணகிரிநாதர் இத்தல சுப்பிரமணிய பகவானை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “ஒருவழி படாது மாயை இருவினை விடாது நாளும்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதர் “சோமநாதன் மடமேவும் முருக”. என்று அருணகிரியார் போற்றுகிறார். மேலும் அருணகிரிநாதர் முருகப்பெருமானை அகப்பகை மற்றும் புறப்பகை நீங்கிட வழிபட்டு திருப்புகழ் பாடலை பாடியுள்ளார். நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்களில் அருணகிரிநாதர் குறிப்பிடும் மூன்று மனிதர்களில் ஒருவர் கலிசை சேவகன் (பழனி), மற்றவர் பிரபுட தேவராயன் (திருவண்ணாமலை), மற்றொருவர் சோமநாதர் (12 புத்தூர்) ஆவார்.
அருணகிரிநாதர் புகழ்ந்த இத்தல கந்தனுக்கு தேனும், தினை மாவும் நிவேதனம் செய்து வழிபட்டு, வழக்குகளில் வெற்றியையும், சிக்கல்களில் தீர்வும் பெறலாம். பகையால் உண்டாகும் துன்பங்களில் இருந்தும் விடைபெறலாம். அறிவாற்றல் குறைந்த, திக்குவாய் உள்ள குழந்தைகளை இங்கு அழைத்து வந்து வழிபாடுகள் செய்ய, சிறந்த அறிவாற்றலும் இனிய குரலும் கிடைக்கப் பெறுகின்றனர்.
அனைத்து வித்தைகளுக்கும், கலைகளுக்கும் அதிபதியாகத் திகழும் இத்தலத்து வித்யாபதீஸ்வரரை தேன் அபிஷேகம் செய்து வழிபட, கலைத்துறையிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கலாம். எழுத்து வடிவாய்த் திகழும் இத்தலத்து அம்பிகை அட்சரவல்லியை பசும்பாலால் அபிஷேகித்து வழிபட, எழுத்துத் துறையில் உள்ளோர் மேன்மையடையலாம். எழுத்துகளில் புதிய பரிமாணங்களை உருவாக்கலாம்.
தல வரலாறு:
சோமநாதன் மடம் இன்று வழக்கில், ‘12 புத்தூர்’ என்று வழங்கப்படுகிறது. வடமொழி வல்லுநர்களான திண்டிமக் கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் இந்த 12 புத்தூர் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தலத்தில் சோமநாத ஜீயர் என்கிற சிறந்த சிவனடியார், மடம் ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தார். அருணாசலேஸ்வரரை தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பி நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர், அரிய தவராஜனாகவும் விளங்கினார். உலகம் புகழ்ந்த இவரது பெருமைகளை தனது திருப்புகழில் புகழ்ந்துள்ளார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரின் சம காலத்தில் வாழ்ந்தவர் இத்தலத்தின் சோமநாத ஜீயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மடத்தில் முருகப்பெருமானை விசேஷமான முறையில் பூஜை புரிந்து வந்ததை தனது திருப்புகழில் பாடிப் பரவியுள்ளார் அருணகிரியார்.
இங்கே கிடைத்த கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் தெளிவாயின. கி.பி.1348-ம் ஆண்டு வீர பொக்கண்ண உடையார் மகன் குமார கம்பண்ண உடையார் காலத்தில் ஸ்ரீ வித்யாபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கௌரவித்துள்ளார். மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாத ஜீயர், இவ்வூர் மக்களால் ‘ஐயன்’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன் பொருட்டு பின்னாளில் இவ்வூர், ‘ஐயன்புத்தூர்’ என்றே அழைக்கப்பெற்றது. தற்போது 12 புத்தூர் என வழங்கப்பெறுகிறது. சிதிலமடைந்த இந்த கோவில் 1810-ல் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடைசியாக 8.7.2012-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
கிழக்கு நோக்கிய திருக்கோவிலில் தெற்குமுக ராஜகோபுரம் ஒரு காலத்தில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து முகமண்டபம் உள்ளது. இங்கே பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இது விஜயநகர அரசர்களின் சின்னமாகும். அடுத்து மகாமண்டபம் உள்ளது. அதன் வலப்புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருணகிரிநாதர் சிற்பங்கள் உள்ளன. அருகே சோமநாத ஜீயரது வரலாற்றுக் கல்வெட்டு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கருவறையில் மூலவர் வித்யாபதீஸ்வரர் அருளே வடிவாக, அழகே உருவாக சுயம்பு லிங்கமாக திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். அன்னை அட்சரவல்லி அழகிய சிறிய மூர்த்தமாக நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, சண்டிகேஸ்வரர், சோமநாதர், அருணகிரிநாதர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மகா சிவராத்திரி, மாசிமகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வழக்கிலிருந்து விடுபட, வித்தையில் சிறக்க செய்ய, சிக்கல்கள் தீர, அறிவு பெருக, திக்குவாய் பிரச்னைகள் அகல, எழுத்தாற்றல் மேன்மையடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
வித்தையில் சிறக்க அருளும் திருவண்ணாமலை 12 புத்தூர் சோமநாதர் மடம் வித்யாபதீஸ்வரர், சுப்பிரமணியரை மனமுருகி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 992 வழக்கிலிருந்து விடுபட அருளும் திருவண்ணாமலை 12 புத்தூர் சோமநாதர் மடம் வித்யாபதீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர்
படம் 2 - 992 வித்தையில் சிறக்க அருளும் திருவண்ணாமலை 12 புத்தூர் சோமநாதர் மடம் வித்யாபதீஸ்வரர்
Comments
Post a Comment