கோவில் 991 - திருவண்ணாமலை படவேடு சோமீசர் கோவில் சண்முகர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-991 [திருப்புகழ் தலம்]
கடன் சுமை தீர்க்கும் திருவண்ணாமலை படவேடு சோமீசர் கோவில் சண்முகர்
24.2.2024 சனி
அருள்மிகு சோமீசர் திருக்கோவில்
[அ/மி ரேணுகாம்பாள் கோவில் வளாகம்]
திருப்புகழ் தலம்
படவேடு-632315
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: திருவண்ணாமலை 60 கிமீ, வேலூர் 34 கிமீ, ஆரணி 20 கிமீ, சந்தைவாசல் 1 கிமீ
மூலவர்: சோமீசர், சோமீச்சர், சோமநாதர், சோமநாதீஸ்வரர்
அம்பாள்: உமாமகேஸ்வரி, எக்கல தேவி
திருப்புகழ் நாயகர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: கமண்டல நதி
புராணப்பெயர்கள்/வேறு பெயர்கள்: படைவீடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1),
தல மகிமை:
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை-வேலூர் சாலையில் திருவண்ணாமலையிலிருந்து 60 கிமீ தொலைவிலும், போளூருக்கு அருகில் இருக்கும் சந்தைவாசலுக்கு மேற்கில் 1 கிமீ தொலைவிலும் இருக்கும் படைவீடு திருத்தலத்தில் கடன் சுமை தீர்க்கும் சோமீசர் கோவில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 34 கிமீ அல்லது ஆரணியிலிருந்து 20 கிமீ பிரயாணம் செய்தாலும் படவேடு சோமீசர் கோவிலை அடையலாம். இக்கோவில் தற்போது மிகவும் சிறப்பு பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ளது. உண்மையில் தற்போதுள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஆதியில் சோமீசர் கோவிலாகும் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. சண்முகர் குடியிருக்கும் இத்திருப்புகழ் தலத்தினை வலையப்பட்டி கிருஷ்ணன் அவர்கள் வரலாற்று சான்றுகளுடன் கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணுகாம்பாள் ஆலயமும், சோமீசர் கோவிலும் ஒரே ஆலய வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது.
இத்தல சண்முகரை போற்றி அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “கரிய குழல்” என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதரின் வேண்டுகோள் இரவில் நாம் துயில் கொள் முன் அவசியம் செய்ய வேண்டிய பிரார்த்தனையாகும்.
இரவு உறங்கும் முன் பாட வேண்டிய சோமீச்சுரம் திருப்புகழ்:
"இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே "
மேலும் சோமீசர் கோவில் திருப்புகழ் பாடல் பிற்பகுதியில் வரும் நரசிம்மாவதார வருணனை இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலை அருணகிரிநாதர் தரிசித்து பாடியிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
தல வரலாறு:
பன்னெடுங்காலமாக ‘படைவீடு சோமீசர் கோவில்” எனும் திருப்பெயரில் பிரசித்தமாகப் போற்றப் பெற்று வந்துள்ள இச்சிவாலயம் சுமார் 100 அண்டுகளுக்கு உட்பட்ட காலத்திற்குள் ‘படவேடு ரேணுகாம்பாள் கோவிலாக’ மாற்றப்பட்டுள்ளது. படைவீடு நகரை தலைநகராகக் கொண்ட படை வீட்டு ராஜ்யத்தில் (மருதரசர் படைவீடு) கோவிலை கட்டியவர் சோமைய தண்ட நாயகன் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. 20-க்கும் மேற்பட்ட இத்திருக்கோவில் கல்வெட்டுகளில் ‘மருதரசர் படைவிடுதி’ என்ற குறிப்புள்ளது. அருணகிரிநாதரும் இத்தல திருப்புகழ் பாடலில் ‘மருதரசர் படைவிடுதி வீடாக நாடி மிக மழ விடையின் மிசையில் வரு சோமீசர் கோயில்தனில்’ என்று குறிப்பிடுகிறார். 1950-களில் இக்கோவில் அறநிலையத் துறைக்கு மாற்றப்படும் சமய்த்திலிருந்த பதிவேடுகள் அனைத்திலும் இக்கோவில் சிவாலயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
தல அமைப்பு:
ரேணுகாம்பாள் முக்கிய தெய்வமாக இருக்கும் இத்திருத்தலத்தின் மற்றொரு கருவறையில் மூலவர் சோமீசர் (சோமீச்சர், சோமநாதர், சோமநாதீஸ்வரர்) சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். கொடிமரம், பலிபீடம், நந்தி எதிரில் உள்ளன. கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். அன்னை உமாமகேஸ்வரி தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்த நிலையில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி, மாசிமகம், அரூத்ரா தரிசனம், ஆடிப்பூரம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
கடன் சுமை நீங்க, மனத்துயரங்கள் தீர, கேட்ட வரம் கிடைக்க, சகல சௌப்பாக்கியங்கள் பெற்றிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 3-8.30
மனத்துயரங்கள் தீர திருவண்ணாமலை படவேடு சோமீசர் மற்றும் சண்முகர் திருவடிகள் பணிந்து போற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 991 கடன் சுமை தீர்க்கும் திருவண்ணாமலை படவேடு சோமீசர் கோவில் சண்முகர்
படம் 2 - 991 மனத்துயரங்கள் தீர அருளும் படவேடு சோமீசர் கோவில்
Comments
Post a Comment