கோவில் 843 - தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்]
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-843
புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் நினைத்ததை நடத்தி தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்]
29.9.2023 வெள்ளி
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில் [TM014522]
நல்லூர்-614208
[திருநல்லூர்-614208]
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 13 கிமீ, தஞ்சாவூர் 38 கிமீ, பாபநாசம் 5 கிமீ
மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)
அம்மன்: கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி)
உற்சவர்: கல்யாண சுந்தரேஸ்வரர்
திருப்புகழ் தெய்வம்: சுப்பிரமணியர்
தேவியர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
புராணப்பெயர்: திருநல்லூர்
வேறு முக்கிய தெய்வம்: அஷ்ட புஜ மகா காளிகாம்பாள்
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சப்தசாகரம் [ஏழு கடல்]
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் (1)
தலமகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோவில் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும், தஞ்சாவூர் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும், பாபநாசம் வட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், சுந்தரபெருமாள் கோவில் ரயில் நிலையம் மற்றும் கபிஸ்தலத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் நினைத்ததை நடத்தி தரும் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் குடியிருக்கும் சிறப்பு மிக்க கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். எனவே ஈசன் இத்திருத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இக்கோவிலில் அம்பிகையாக கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி) வீற்றிருந்து அருள்கின்றார். இத்திருத்தலம் ஒரு சிறப்பு மிக்க கல்யாண பரிகார தலமாகும்.
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தலங்களில், இது 20-வது தலமாகும். இங்குதான் இறைவன் திருநாவுக்கரசருக்கு (அப்பர் பெருமான்) திருவடி சூட்டியதாக (திருவடி தீட்சை) கருதப்படுகிறது. ஆதலால் பெருமாள் கோவிலைப் போல சடாரி வழக்கம் இங்கு உள்ளது.
தணிகை மணி அவர்கள் இத்திருத்தலம் திருஞானசம்பந்தர் முக்தி பெற்ற தலம் என்று கூறியுள்ளார். அமர்நீதி நாயனார் வாழ்ந்த திருத்தலம் இது. அவரது மடம் கோவிலுக்கருகில் உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோஷம் நீங்க இத்தல தீர்த்தத்தில் நீராடினார். அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சியைக் காட்டியருளினார். அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலவரின் பின்புறத்தில் காணலாம்.
அருணகிரிநாதர் திருநல்லூர் திருத்தலத்தில் முதல் சந்நிதியில் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “மூல முண்டகம்” என்று திருப்புகழ் பாடல் தொடங்கி “தியாகர் வந்து உறை ந(ல்)லூர் அமர்ந்து வளர் – தம்பிரானே” என்று போற்றி பாடியுள்ளார்.
இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைப்பார்கள். அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கல்யாண சுந்தரர் (கல்யாண சுந்தரேஸ்வரர்) என்பதும் இவரது திருநாமம். அமர்நீதி நாயனார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரவசத்திற்காக வளைகாப்பு நடத்துகின்றனர். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதிருக்கும் ஆண்களும், பெண்களும் இங்கு வந்து கல்யாண சுந்தரேஸ்வரரை மாலை சூட்டி வழிபட்டு, பின் ஒரு மாலையை வாங்கி, அணிந்து பிரகாரம் வலம் வந்தால், திருமணத்தடை அகன்று, திருமணம் விரைவில் நடைபெறுகிறது.
தல வரலாறு:
திருவானைக்கா ஜம்புலிங்கப் பெருமானை முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டு, அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தார் என்கிறது தல வரலாறு. இவர் சிவபெருமானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோவில்களை அமைத்தார். அந்த வரிசையில் பெரிய அளவில் அமைந்த கோவிலே திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலாகும். இத்தலத்துப் பெருமானைத் திருநல்லூர் உடைய நாயனார் என்றும், தல விநாயகரை அகம்படி விநாயகர் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 30.08.2013-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
திருநல்லூர் திருக்கோவிலுக்கு முன் சப்தசாகரம் [எழு கடல் சங்கமம்] தீர்த்த குளம் அமைந்துள்ளது. கிழக்கே 7 நிலை மாடத்துடன் கூடிய ராஜகோபுரமும், மேற்கில் சிறிய கோபுரமும் உள்ளது. கொடி மரம், அதிகார நந்தியை தாண்டியவுடன் காசி விநாயகர் கிழக்கு நோக்கி அருள்கின்றார். அடுத்து கருவறைக்கு ஏறி செல்லும் படிக்கட்டுகள் யானை ஏற முடியாத வண்ணம் உள்ளது. இப்படி இருக்கும பல கோவில்களில் இக்கோவில் ஒரு பெரிய மாடக்கோவிலாகும். கருவறையில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) சுயம்பு லிங்கத் திருமேனியாக திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். கருவறை வாசலுக்கு அருகில் அம்பிகை கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி) தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கின்றார்.
முதல் பிரகாரத்தில் கருவறைக்கு நேர் பின்னால் அருணகிரி பெருமானால் பாடப் பெற்ற திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு கருணை பொங்க அருள்பாலிக்கின்றார்.
மேலும் முதல் பிரகாரத்தில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், நால்வர், 63 நாயன்மார்கள், உற்சவர், சப்தகன்னியர், கன்னி விநாயகர், பல லிங்க திருமேனிகள், சோமாஸ்கந்த மூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆனந்த நடராஜர், அமர்நீதி நாயனார், குந்தி வழிபடும் கோலம், மங்கயர்க்கரசி, சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் வீற்றிருந்து அருள்கின்றனர். கோஷ்டத்தில் உச்சிஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி அருள்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் ஆற்றல் மிக்க அஷ்ட புஜ மகா காளிகாம்பாள் தனி சந்நிதியில் 16 திருக்கரங்களுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மாசி மகம் திருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம்
பிரார்த்தனை:
நினைத்தது நடக்க, எல்லா நலம் பெற, திருமணத்தடை அகல, சுகப்பிரசவம் வேண்டி
நேர்த்திக்கடன்:
முடிக்காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12.30 மாலை 4-9
நலம் தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரருடன் (பஞ்சவர்ணேஸ்வரர்) சுப்பிரமணியரையும் தரிசித்து பயன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 843 நினைத்ததை நடத்தி தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்]
படம் 2 - 843 நலம் தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்). லிங்கத் திருமேனி பின்னால் ஈசன் திருமணக் கோலம்
Comments
Post a Comment