கோவில் 750 - ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருப்புகழ் சண்முக சுப்பிரமணியர்

 🙏🏻🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-750

பித்ரு தோஷம் நீக்கும் ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருப்புகழ் சண்முக சுப்பிரமணியர்

28.6.2023 புதன்


அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்

[திருப்புகழ் தலம் சண்முக சுப்பிரமணியர் உபகோவில்]

திருநணா/கூடுதுறை

பவானி- 638301

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: ஈரோடு 15 கிமீ


மூலவர்: சங்கமேஸ்வரர், சங்கமுக நாதேஸ்வரர், அளகேசர், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்

அம்பாள்: சங்கமேஸ்வரி, பவானி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவநாயகி, வக்கிரேஸ்வரி

திருப்புகழ் தெய்வம்: சண்முக சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: இலந்தை

தீர்த்தம்: காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்

புராணப்பெயர்: திருநணா, பவானி முக்கூடல், கூடுதுறை, திருவாணிக்கூடல், தென்திரிவேணி சங்கமம், தட்சிண அளகை

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1)


தலமகிமை:

ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநாகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள பவானி கூடுதுறையில் (3 ஆறுகள் சங்கமிக்கும் இடம்) பித்ரு தோஷம், பிறப்பு, இறப்பு மற்றும் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருளும் சிறப்பு மிக்க சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அம்பாள், தலம், தீர்த்தம் மூன்றிற்கும் பவானி என்று பெயர் இருப்பது சிறப்பு. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் அருளிய 207-வது திருத்தலமாகும். கொங்கு நாட்டு திருத்தலங்களில் இது 3-வது தலமாகும். அருணகிரி நாதர் இங்கு வீற்றிருக்கும் சண்முக சுப்பிரமணியர் மீது ஒரு திருப்புகழ் பாடல் [கலைமேவு ஞான….] பாடியுள்ளார்.


இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று. ஆண்டு தோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சண்முக சுப்ரமணியர் மூவர் மீதும் பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பம்சமாகும்.


வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் இக்கோவில் அமைந்துள்ளது.


பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.


இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, சங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இந்தத் தலத்துக்கு வந்து நீராடி, இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே, இத்தலத்துக்கு 'திருநணா’ என்ற புராணப் பெயரும் உண்டு.


தந்தக்கட்டில்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். ஒருமுறை அவரையே பேராபத்தில் இருந்து காப்பாற்றிய அனுபவம் கிடைக்கவும், சிலிர்த்துப் போன காரோ, உமையவளுக்குத் தந்தக்கட்டில் வழங்கினாராம்.


குழந்தை வரம்: இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரம் ஆகும். வேதமே மர வடிவில் வந்திருப்பதாக ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர், இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீசங்கம விநாயகரையும், ஸ்ரீசங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இலந்தைப் பழங்களைச் சாப்பிட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல், இங்கே உள்ள அமிர்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஅமிர்த லிங்கத்தை வழிபடுவோருக்குக் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.


தல வரலாறு:

பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர். ''குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்'' என இறைவன் கேட்க, ''அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்'' என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் 'தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம். இவ்வாலயத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்டனர்.


தல அமைப்பு:

கோவிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. சங்கமேஸ்வரர் கோவிலின் பிரதான கோபுரம் வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது. இக்கோவில் கருவறையில் மூலவராக சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரே ராஜ நந்தி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அருள்கின்றனர். வேதநாயகி தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்கின்றார். சுற்றில் மகேஸ்வரி, கௌரி மஹேந்திரி, சண்டிகேஸ்வரி அருள்கின்றனர்.


அம்பாளுக்கும் சுவாமிக்கும் நடுவே முருகப்பெருமான், சண்முக சுப்பிரமணியர் என்ற திருப்பெயருடன் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள். சண்முக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.


அம்பாள் சந்நிதிக்கு இடப்புறம் ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் சந்நிதிகள் அமைந்துள்ளன வேணுகோபாலர் சந்நிதிக்குப் பின்புறத்தில் பசுவின் சிற்பம் உள்ளது. இந்தப் பசுவின் முன்பகுதியிலும், பின்பகுதியிலுமாக இரண்டு தலைகள் அமைந்திருக்கின்றன.இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோக நரசிம்மர் லட்சுமியுடன் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சகல யோகங்களும் கைகூடும். மேலும் சங்கம விநாயகர், ராஜ கணபதி, சித்தி விநாயகர், துவார விநாயகர், வல்லப கணபதி, அரச விநாயகர், துவார முருகன், சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள், ராமனாதேஸ்வரர், பர்வதவர்த்தினி, பாலதண்டாயுதபாணி, பஞ்சலிங்கம், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர், தத்தாத்ரேயர், சனீஸ்வரர், ஜுரகேஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர்.


திருவிழா:

ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடி 18, சித்ரா பௌர்ணமி, ரதசப்தமி சித்திரை (13 நாள்), கிரகண காலங்கள், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம்,


பிரார்த்தனை:

பித்ரு தோஷம், பிறப்பு, இறப்பு, அனைத்து தோஷங்கள் நீங்க, பாவங்கள் போக்க, இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய, திதி கொடுக்க, நினைத்த காரியங்கள் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, பரிகார நிவர்த்தி, காய்ச்சல், நோய், தோல் வியாதி, மன நோய் குணமாக,


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 5.30-1 மாலை 4-9


பாவம் போக்கும் ஈரோடு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் மற்றும் சண்முக சுப்பிரமணியரை ஒரு சேர வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 750 பித்ரு தோஷம் நீக்கும் ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிliல் திருப்புகழ் சண்முக சுப்பிரமணியர்


படம் 2 - 750 பாவம் போக்கும் ஈரோடு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்