கோவில் 746 - இலங்கை யாழ்ப்பாணம் உபயகதிர்காமம் சக்கர சண்முகர் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-746
விருப்பங்களை நிறைவேற்றும் இலங்கை யாழ்ப்பாணம் உபயகதிர்காமம் சக்கர சண்முகர் கோவில்
24.6.2023 சனி
அருள்மிகு உபயகதிர்காமம் சக்கர சண்முகர் திருக்கோவில்
உபயகதிர்காமம்
புலோலி (Puloli)
யாழ்ப்பாணம் மாவட்டம் (Jafina)
இலங்கை (Sri Lanka)
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 32 கிமீ
மூலவர்: சக்கர சண்முகர் (யந்திரம்)
தல விருட்சம்: விளா மரம்
தலமகிமை:
இலங்கையில் பிரசித்தி பெற்ற சுயம்பு இந்துக் கோவில்களுள் உபயகதிர்காமம் சக்கர சண்முகர் கோவில் முக்கியமானது. இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படும் இக்கோவில் இலங்கை வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 32 கிமீ தொலைவில் புலோலி என்னுமிடத்திலுள்ளது. பருத்தித்துறை-யாழ் வீதியிலுள்ள மந்திகைச்சந்தியில் இருந்து, வல்லிபுர வீதி வழியாக நடந்தால் இவ்வாலயத்தை அடையலாம். அருகில் 200 வருட வரலாறு கொண்ட பெரியதேவனத்தாய் விநாயகர் ஆலயம் உள்ளது.
மூன்று வேளை நித்திய பூஜை நடைபெறுகின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் இரவு திருக்கார்த்திகைக் கற்பூரத் திருவிழா மற்றும் கதிர்காமத் தீர்த்தவாரி திருவிழாவிற்கு அடுத்ததாக இத்தலத்தில் திருவோண நட்சத்திரத்தில் நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா சிறப்புற நடைபெறும். முத்துலிங்க சுவாமிகளால் வரையப்பட்ட சுப்பிரமணியர் யந்திரமே கதிர்காமத்தின் அருட்பெருக்கிற்கு காரணம் என்பர். அவ்வாறே உபயகதிர்காம சக்கர யந்திரமும் போற்றப்படுகின்றது. வெண்கல மலையில் சுயம்புவாகத் தோன்றிய சக்கர யந்திரமே மூலவராக அமைந்ததால் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் என்ற பெயரைப் பெற்றது.
தல வரலாறு:
1909-ம் ஆண்டு, தமிழ்நாடு திருநெல்வேலி குகனருட்செல்வி லோகாம்பாளின் என்ற பக்தையின் கனவில் முருகப்பெருமான் தோன்றி இவ்வாலய யந்திர மகிமை உரைத்து, இது பச்சிமப்புலவர்கான நகரில் விளாமரத்தடியிலுள்ள வெண்கல் மலையில் சுயம்புவாக உள்ளதாக தெரிவித்தார். அந்த யந்திர உருவை வரைந்து வந்து இல்லத்தே பூஜிக்குமாறு அருளினார். பச்சிமப்புலவர்கான நகரம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ளதென 1911-ல் கனவில் முருகன் மீண்டும் கூறி அருளினார்.
பச்சிமப்புலவர்கான நகரம் என்பது புலோலி என யாழ் பண்டிதர்கள் கூறி உதவ யந்திரம் உள்ள இடத்தை 11 நாளாக புலோலி மக்கள் உதவியுடன் தேடினார். வைகாசி விசாகத்தன்று இடத்தை அடைந்த அம்மையார் அந்த யந்திர உருவை வரைந்து சென்று இல்லத்தே பூஜித்து வந்தார். அம்மையார் கனவில் முருகன் மீண்டும் 1924-ல் உரைத்தபடி, ஜூலை 25, 1924 அன்று யந்திர மகிமையை புலோலி மக்கள் அறியுமாறு பிரசுரத்து ஆலயம் எழுப்பச் செய்தார். முருகப்பெருமான் கருணையால் இக்கோவில் எழுப்பப்பட்டது. ஆகச் சிறந்த முருக பக்தை லோகாம்பாள் அம்மையார் செப்டம்பர் 20, 1970-ல் இறந்தார்.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் ஸ்ரீ சக்கர சண்முகராக (யந்திரம்) சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர், சிவபெருமான் மற்றும் சக்தியை குறிக்கும் எழுத்துகளும் சக்கர வலப்பாகத்து முனைகளை அடுத்து அமைந்துள்ளன. தலவிருட்சம் விளாமரத்து விளாத்தீஸ்வரன் எனும் தெய்வம் 200 ஆண்டுகளாக சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
விருப்பங்கள் நிறைவேற, ஞானம் மேம்பட, இகபர சுகங்கள் பெற, உடல் நலன் கிட்ட, குழந்தை வேண்டி, திருமணத்தடை நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
ஞானம் மேம்பட அருளும் இலங்கை யாழ்ப்பாணம் உபயகதிர்காமம் சக்கர சண்முகரை மனமுருகி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 746 இலங்கை யாழ்ப்பாணம் உபயகதிர்காமம் சக்கர சண்முகர்
Comments
Post a Comment