கோவில் 687 - ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் திருக்கல்யாண சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-687
மாங்கல்ய பாக்கியம் அருளும் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் திருக்கல்யாண சுப்பிரமணியர் கோவில்
26.4.2023 புதன்
அருள்மிகு திருக்கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில்
(இலுப்பிலி பழனி ஆண்டவர் கோவில்)
குருவரெட்டியூர்-638504
இலுப்பிலி பஞ்சாயத்து
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: ஈரோடு 47 கிமீ, பவானி 28 கிமீ, அந்தியூர் 16 கிமீ
செல்: அரவிந்த் 95661 70691
மூலவர்: கல்யாண சுப்பிரமணியர் & பழனி ஆண்டவர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரிலிருந்து 47 கிமீ தொலைவில் அந்தியூர் வட்டம் இலுப்பிலி பஞ்சாயத்தில் உள்ள குருவரெட்டியூரில் மாங்கல்ய பாக்கியம் அருளும் திருக்கல்யாண சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இக்கோவில் சீர்மிகு செங்குந்த மரபினரால் பராமரிக்கப்படுகின்றது. அந்தியூரிலிருந்து 16 கிமீ அல்லது பவானியிலிருந்து 28 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம். ஆதியில் இத்திருக்கோவில் இலுப்பிலி பழனி ஆண்டவர் கோவில் என்றழைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் திருக்கல்யாண சுப்பிரமணியர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தற்போது திருக்கல்யாண சுப்பிரமணியர் கோவில் என்றழைக்கப்பட்டு வருகின்றது.
இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. காலையில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் வள்ளி, தெய்வானை சமேத திருக்கல்யாண சுப்பிரமணியருக்கு நடைபெறும். பின்னர் விநாயகர் கோவிலிலிருந்து சீர்வரிசை எடுத்து வந்து வள்ளி, தெய்வானை திருக்கல்யாண சுப்பிரமணியர் திருக்கல்யாண மஹோற்சவம் சிறப்புற நடைபெறுகிறது. தைப்பூசத் திருநாளன்று காவிரி ஆற்று தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றது. மாலையில் சுவாமி தேவியருடன் திரு உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். வருகின்ற 2023 வைகாசி விசாக திருவிழா நாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மிகப் பெரிய அளவில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கிருத்திகை, சஷ்டி (இன்று) தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருக்கல்யாண சுப்பிரமணியரை வழிபடுவோருக்கு விரைவில் மாங்கல்ய பிராப்தம் கிட்டும். ஆயுள் விருத்தி அடையும், குழந்தை வரம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். செல்வம் பெருகும்.
தல வரலாறு:
150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்திருக்கோவிலை தெய்வத்திரு ஓம் பிரகாசம் குடும்பத்தினரும், செங்குந்த மரபினரும் கட்டி, சிறந்த முறையில் பரமாரித்து வருகின்றனர். ஆதியில் இக்கோவில் மூலவராக பழனி ஆண்டவர் வீற்றிருந்து அருள்பாலித்து வந்தார். எனவே இக்கோவில் இலுப்பிலி பழனி ஆண்டவர் கோவில் என்றழைக்கப்பட்டு வந்தது. பொதுவாக பழனி ஆண்டவர் மலையில்தான் வீற்றிருப்பார். இப்பகுதியில் மலை இல்லாததால், தெய்வத்திரு ஓம் பிரகாசம் மற்றும் பிற அறங்காவலர்கள் வள்ளி, தெய்வானை சமேத திருக்கல்யாண சுப்பிரமணியரை பிரதிஷ்டை செய்து, இத்திருக்கோவிலை திருக்கல்யாண சுப்பிரமணியர் கோவில் என்று அழைக்கத் தொடங்கியதாக அறங்காவலர் குழு கூறியது.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவராக திருக்கல்யாண சுப்பிரமணியர் கல்யாண திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆதிக் கருவறையில் பழனி ஆண்டவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மேலும் விநாயகப்பெருமான், பரமேஸ்வரர், பரமேஸ்வரி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
மாங்கல்ய பாக்கியம் வேண்டி, சந்தான பாக்கியம் வேண்டி, செல்வம் பெருக, குடும்ப ஒற்றுமை ஓங்க, எல்லா நலமும் பெற, ஆயுள் விருத்தி அடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
குடும்ப வாழ்வு சிறக்க அருளும் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் திருக்கல்யாண சுப்பிரமணியர் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 687 மாங்கல்ய பாக்கியம் அருளும் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் திருக்கல்யாண சுப்பிரமணியர்
படம் 2 - 687 குடும்ப வாழ்வு சிறக்க அருளும் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் திருக்கல்யாண சுப்பிரமணியர்
மிக அருமை🙏
ReplyDelete