கோவில் 202 - கேரளா பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                                    

தினம் ஒரு முருகன் ஆலயம்-202

தமிழில் பூஜை நடைபெறும் திருப்புகழ் தலம் கேரளா பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில்

27.12.21 திங்கள்


அருள்மிகு கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

கொடும்பு-678551

பாலக்காடு மாவட்டம்

கேரளா மாநிலம்

இருப்பிடம்: பாலகாட்டிலிருந்து 5 கிமீ 


மூலவர்: கல்யாண சுப்ரமணிய சுவாமி

தேவியர்: வனவள்ளி, கஜவள்ளி

உற்சவர்: பாலசுப்ரமணியர்

தலவிருட்சம்: செண்பக மரம்

தீர்த்தம்: சோகநாசினி நத

பாடியவர்: அருணகிரி நாதர்

பழமை: 500 ஆண்டுகள்


தலமகிமை:

கேரளாவின் பழமையான முருகன் கோவில்களில் பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் ஒன்றாகும். இங்குள்ள கோவில்களிலே இரண்டாவது  உயரமான இராஜ கோபுரம் உள்ள கோவில் இதுவாகும். தமிழ் முறைப்படி பூஜைகள்,வழிபாடுகள் நடக்கின்றன. தமிழை வளர்த்த செங்குந்தர் மரபினர் கோவிலின் அர்ச்சகராக உள்ள கோவில். 


கருவறையிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை சிலைகள் ஒரே சிலையில் செதுக்கப்பட்டவை. இங்கு திருமணம் செய்து கொள்வது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இவ்வாலயத்தில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால் இத்தல இறைவனை ‘கல்யாண சுப்பிரமணிய சுவாமி’ என்றழைக்கின்றனர். திருமணம் செய்த தம்பதியர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நிலையில், இக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால், அவர்களின் மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பழனி முருகன் கோவிலில் நடைபெறும் விழாக்கள், தேரோட்டம் போன்றவை இக்கோவிலிலும் நடைபெறுவதால், இந்த ஆலயத்தை ‘பழனியில் பாதி கொடும்பு’ என்று போற்றி மகிழ்கின்றனர்.


கோவிலுக்கு அருகில் நதியை சோகநாசினி என்ற புண்ணிய நதி ஓடுகிறது. இந்தப் பெயருக்கு ‘அடியார்களது சோகத்தை நாசம் செய்வது’ என்று பொருள்.  இந்நதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமகத் திருவிழா நடத்தப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமக தினமான அதே நாளில் இங்கும் மகாமகத் திருவிழா நடத்தப்படுகிறது. எனவே அன்று இந்நதியில் நீராடினால், வினைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. ஆகவே கூட்டம் அலைமோதும். தவிர, தீபாவளி அமாவாசை தினத்தன்று சுவாமி இங்கு வந்து தீர்த்த ஸ்நானம் செய்வார். அன்று பக்தர்களும் அதிகளவில் நீராடுவர்.

அருணகிரிநாதப்பெருமானால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரே கேரளத் திருத்தலம் ‘கொடும்பு’ மட்டும்தான். இத்திருக்கோவிலில் அருணகிரியார் முருகனை தரிசித்து வழிபட்டிருக்கிறார். அவர், ‘கலைஞரெனும் கற்பு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘ஏழு உலகங்களிலும் முறுக்கி விடப்பட்ட மயில் என்கிற அழகிய குதிரையைச் செலுத்தும் செட்டியே... பராக்ரமசாலியே... கொடும்பைத் தலத்தில் விளங்கும் பெருமானே...’ என்று இந்தத் திருத்தல முருகனைப் போற்றுகிறார். 


தலவரலாறு:

காஞ்சிப்பதி நெசவுத் தொழிலுக்குப் பெயர்பெற்றது. காஞ்சிபுர நெசவாளர்களின் திறமையை உணர்ந்த அந்தக் கால அரசர்கள், அவர்களைத் தங்கள் நாட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு இருப்பிடம் முதலான அனைத்து வசதிகளையும் கொடுத்து நெசவுத் தொழிலை மேம்படுத்தியுள்ளனர். இப்படி, சேர நாட்டின் பாலக்காடு பகுதியில் குடியேறிய நெசவாளர்கள் பலர் செங்குந்த மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள், முருகக்கடவுளைக் குலதெய்வமாக வழிபட்டவர்கள். 


பராசக்தியின் கால் சிலம்பிலிருந்து தோன்றிய நவமாதர்களுக்குப் பிறந்தவர்கள் வீரபாகுத் தேவர் முதலான நவவீரர்கள். இவர்கள் முருகப்பெருமானின் சகோதரர்களாகக் கருதப்படுபவர்கள். சூரபத்மனுடனான போரின்போது முருகனுக்கு உறுதுணையாக இருந்து வெற்றி தேடித் தந்தவர்கள். இந்த வீரபாகுத்தேவரின் வழி வந்தவர்கள் செங்குந்த மரபினர் என்பது நம்பிக்கை. எனவே, முருக வழிபாடு இவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இவர்கள், செல்லும் இடங்களில் எல்லாம் முருகக் கடவுளுக்கு ஆலயம் கட்டி, திருவிழாக்கள் நடத்தி வந்துள்ளனர். அப்படி இவர்களால், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதுதான், பாலக்காடு அருகில் உள்ள ‘கொடும்பு’ எனும் சிற்றூரில் உள்ள அருள்மிகு கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இன்றும் இங்கு இந்த மரபினர்தான் அர்ச்சகர்களாக இருந்து தமிழில் பூஜை செய்து வருகின்றனர்.


தல அமைப்பு:

தமிழகக் கட்டடக்கலைப்பாணியில், அழகான சிற்பங்களுடன் அமைந்த ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. மயில் மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் மூலஸ்தானத்தில் முருகப்பெருமான், கல்யாண சுப்ரமணிய சுவாமி என்ற திருப்பெய்ருடன் ஒரு முகம் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். முருகனுக்கு இருபுறமும் வனவல்லியும் கஜவல்லியும் காட்சியளிக்கின்றனர். இங்குள்ள பாலசுப்ரமண்யர் உற்சவமூர்த்தி வடிவமும் சிறப்பாக உள்ளது. 


இங்கு சிவபெருமான் ‘கோஷ்டேச்வரர்’ என்ற பெயரிலும் அம்பிகை, ‘மரகதாம்பாள்’ என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். மேலும் பரசுராமர், கிருஷ்ணர், சாஸ்தா, கால பைரவர் சந்நிதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. செண்பக மரம், ஆலய தலவிருட்சமாக இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள 36 கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இம்மண்டபத்தில் உள்ள எட்டுத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் கண்களை கவர்வன. நாகலிங்ககணபதி, தண்டபாணி, ஊர்த்துவ தாண்டவர், வீரபாகுத்தேவர், யானை உரித்த பெருமான், மயில்வாகனன், காளி, ருக்மணி-சத்யபாமாவுடன் வேணுகோபாலன், ஆகிய சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு.


திருவிழா:

கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், தைப்பூசம் (10நாள்+தேர்), பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, விஷு, அனைத்து கிருத்திகை, சஷ்டி, பிரதோஷ தினங்கள்


பிரார்த்தனை:

தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்க, துயரங்கள், வினைகள் அகல, 


நேர்த்திக்கடன்:

தங்க மயிற்பீலிக் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி எடுத்தல், காவடி சிந்து பாடுதல், விசேஷ அர்ச்சனை, அலங்காரம், பூஜைகள் 


திறக்கும் நேரம்:

காலை 5.30-12 மாலை 4.30-8 


பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமியை மனமார வேண்டினால் தம்பதியர் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை ஓங்கும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - தமிழில் பூஜை நடைபெறும் கேரளா பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலயம்



படம் 2 - தம்பதியரின் மனக்கவலை போக்கும் கேரளா பாலக்காடு கொடும்பு கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்