கோவில் 508 - மலேசியா பினாங்கு கொடிமலை அருளொளி திருமுருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-508
சஷ்டியின் 5-வது நாளில் வினை தீர்ப்பான் மலேசியா பினாங்கு கொடிமலை அருளொளி திருமுருகன் கோவில்
29.10.2022 சனி
அருள்மிகு கொடிமலை அருளொளி திருமுருகன் திருக்கோவில்
Bukit Bendera-11300
பினாங்கு மாநிலம் (Penang)
மலேசியா (Malaysia)
இருப்பிடம்: தலைநகர் ஜார்ஜ் டவுன் 9 கிமீ
மூலவர்: அருளொளி திருமுருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
பாடியவர்: விஜயகுமார் (கொடிமலை அருளொளி திருமுருகன் துதிமாலை)
தலமகிமை:
மலேசியாவின் பினாங்கு நகரிலிருந்து 7 கிமீ தொலைவில் மலையுச்சியில் கொடிமலை அருளொளி திருமுருகன் கோவில் அமைந்துள்ளது. பினாங்கு கொடிமலையில் புகழ்மிக்க திருமுருகனின் ஆலயம் கிழக்காசியாவிலேயே அதிகமான உயரத்தில் (2500 அடி) மலையுச்சியில், அடியார்களின் பாவங்களைப் போக்கி அருளும் தலமாக அமைந்திருக்கிறது. முருகன் வேண்டுவோர் வேண்டும் வரங்களையெல்லாம் அள்ளித் தருகின்றான். ஆலய தரிசனம் செய்த வாரியார் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார், பன்றிமலை சுவாமிகள் போன்ற பேரருளார்கள் கொடிமலை முருகனை புகழ்ந்து துதித்துள்ளனர். இந்த முருகப்பெருமானை மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வழிபட்டுச் செல்வது மிகவும் சிறப்பம்சம்.
மலேசியா நாட்டின் முதன்மையான மலை வாசஸ்தலமாக விளங்கும் இவ்வாலய கொடிமலை முருகன் குன்றக்குடி குமரனை நினைவுபடுத்துகிறார். கந்தசஷ்டி விழாவிற்கும், ஆடிக்கிருத்திகைக்கும் புகழ்பெற்றது அருளொளி திருமுருகன் கோவில். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆடிக்கிருத்திகை 12 நாட்கள் \ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலெக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை தீபம், அமாவாசை, கார்த்திகை, சஷ்டி விழாக்களும் நடைபெற்று வருகின்றன. திருவிழாக் காலங்களில் மக்கள் அதிகமாக வருகை புரிவார்கள்..
தலவராறு:
பினாங்கு கொடிமலையில் வேல் ஒன்று நடப்பட்டு கொடிமலை வாழ்மக்கள் வணங்கி வந்தனர். பின்னர் வேலாயுதம் அமைந்த இடத்தில் அருளொளி முருகப்ருமானுக்கு ஆலயம் கட்டுவதற்கு அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களைத் தலைவராகக் கொண்ட நிர்வாகத்தால் பினாங்கு கொடிமலை உச்சியில் அரசாங்கம் வழங்கிய இடத்தில் கட்டப்பட்டது. திருப்பணிக்கெனெப் பக்தப் பெருமக்கள் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளார்கள். திருப்பணி வேலைகள் தமிழ்நாட்டு ஸ்தபதிகளால் வடிக்கப்பட்டு 5.7.71-ல் தவத்திரு சுவாமி சித்திரமுத்து அடிகளாரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2-வது கும்பாபிஷேகம் 23.6.83, 3-வது கும்பாபிஷேகம் 2002-லும் நடைபெற்றன.
தல அமைப்பு:
இழுவை ரயில் மூலம் கோவிலுக்கு செல்லலாம். மூலஸ்தானத்தில் அருளொளி திருமுருகன் ஆறு முகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மேலமர்ந்தபடி வள்ளி, தெய்வானை காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மூலவரின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கத்தில் இடும்பனும் அருளுகின்றனர். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, விநாயகர் உற்சவர்கள் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்டன. உற்சவர் விக்கிரகம் வயலூர் முருகனைப் போல அழகாக உருவாக்கப்பட்டது. அசுர மயில் .வடக்கு நோக்கி எழிலாக அமர்ந்தருள்கிறது.
திருவிழா:
கந்த சஷ்டி (7 நாட்கள்), ஆடிக்கிருத்திகை (12 நாட்கள்), விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலெக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை தீபம், அமாவாசை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வினைகள் தீர. நோய்கள் குணமாக. பாவங்களை போக்க, வேண்டும் வரங்கள் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30 முதல் இரவு 8.30 வரை
சஷ்டியின் 5-வது நாளில் தீராத நோய்கள் தீர்க்கும் மலேசியா பினாங்கு கொடிமலை அருளொளி திருமுருகனை எந்நேரமும் தொழுது மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment