கோவில் 506 - மலேசியா பஹாங் மாரான் மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-506

சஷ்டியின் 3-வது நாளில் கால் ஊனமுற்றோரை நடக்க வைக்கும் மலேசியா பஹாங் மாரான் மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி கோவில்

27.10.2022 வியாழன்

அருள்மிகு மரத்தாண்டவர் (Marathandavar) பால தண்டாயுதபாணி திருக்கோவில்

மாரான் மாவட்டம் (Maran)-26500

பஹாங் மாநிலம் (Pahang)

மலேசியா (Malaysia)

இருப்பிடம்: மாரான் 23 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி

பழமை: 120 ஆண்டுகள்

பதிகம்: வசந்தகுமார் (மாரான் மரத்தாண்டவர் துதிமாலை)


தலமகிமை:

மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள மாரான் மாவட்டத்தில் மாரான் நகரிலிருந்து 21 கிமீ தொலைவில் மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. . பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர். 120 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.


இந்த கோவிலுக்கு தூய பக்தியோடு வந்து வேண்டுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கின்றன. ஊனமுற்றோர் நடப்பது, ஊமைகள் பேசுவது, நோயுற்றோர் குணமாவது போன்ற அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தலப்பெயர் வர காரணமான மூல ருத்ராட்ச மரம் இறந்துவிட்டது. ஆனால் மற்றொரு ருத்ராட்ச மரம் வளாகத்தில் உள்ளது, இது கோவிலின் மைய புள்ளியாகவும் உள்ளது. வேண்டுதல் செய்யும் பக்தர்கள் தொட்டில் போன்ற பொருட்களை மரத்தின் தண்டு மற்றும் கிளைகளில் தொங்கவிடப்படும் மஞ்சள் துணியில் கட்டி விடுவார்கள். அவர்களின் விருப்பம் இறைவனால் நிறைவேற்றப்பட்டவுடன், பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.


தலவராறு:

சுமார் 120 வருடங்களுக்கு முன் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்கு சாலைகள் அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய ருத்ராட்ச மரத்தை வெட்டும் போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அதே வேளையில் மரம் வெட்டிக்கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் வந்து, அவர் அந்த மரத்தை வெட்டக்கூடாதென்றும் சாலையைச் சிறிது தூரத்திற்கு அப்பால் போடவேண்டுமென்றும் சொன்னார். ஆங்கிலேய மேற்பார்வையாளர் அதைச் செய்ய மறுத்தார். உடனே சிறிய குழந்தை வடிவு கொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப்பார்த்து வியந்த மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு அப்பால் போட உத்தரவிட்டார். அன்றிலிருந்து அந்த இடம் ஒரு புனித இடமாகியது. இந்த இடத்திற்கு மரத்தாண்டவர் பாலதண்டாயுதபாணி என்ற பெயர் அமைந்தது. மூலமரம் தற்போது இல்லை. வேறு ஒரு மரம் வளாகத்தில் உள்ளது.


இக்கோவிலைப் பற்றி முன்னால் தலைமை பூஜாரி கணபதி குருக்கள் கோவிலைப் பற்றி சொல்லும் போது ‘1962-ல் நான் ஒரு கனவு கண்டேன். அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே வசித்த ஒரு முருக பக்தர் இந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஓடையில் குளித்துவிட்டு, இந்த மரத்தினுள் ஐக்கியமானதைக் கண்டேன். அதே மகான் கனவில் என்முன் தோன்றி இங்கேயே என்னைச் சேவை செய்யச் சொன்னார். அதன்படிதான் நான் முழுமனதோடு இங்கே சேவை செய்துவருகிறேன். மேலும் இங்கு அடிக்கடி நிகழும் அற்புதம் என்னவென்றால், இந்தச் சாலையில் செல்லும் வாகனம் ஏதும் நிற்காமல் சென்றால் சிறிது தூரம் சென்றவுடன் ஓடமுடியாமல் நின்று விடும். கோவிலிலிருந்து விபூதியை வாங்கி பூசிய பின்தான் மீண்டும் ஓடும். பங்குனி உத்திரம்தான் இந்தக் கோவிலின் மிகச் சிறப்பான நாள். பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. அந்தக்காலத்தில் சுமார் 500 அர்ச்சனைகள் நடைபெறும். இப்போது 300,000 மேல் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.’


தல அமைப்பு:

இத்திருக்கோவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது சிறப்பு கருவறயில் முருகப்பெருமான் பால தண்டாயுதபாணி என்ற திருப்பெயருடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மூலவருக்கு வலப்புறம் விநாயகப்பெருமானும் இடப்புறம் சிவபெருமானும் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். விஷ்ணு, பார்வதி தேவி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்கின்றனர். கோவிலின் முன்புறம் இடும்பன் மற்றும் நாகநாதர் சந்னிதிகள் உள்ளன.


.திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம்


பிரார்த்தனை:

ஊனமுற்றோர் நடக்க, ஊமைகள் பேச, நோயுற்றோர் குணமாக, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, எல்லா நன்மைகளும் கிடைக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5.30 முதல் இரவு 9 வரை


சஷ்டியின் 3-வது நாளில் ஊமைகளையும் பேச வைக்கும் மலேசியா பஹாங் மாரான் மரத்தாண்டவர் பாலதண்டாயுதபாணி போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - ஊமைகளையும் பேச வைக்கும் மலேசியா பஹாங் மாரான் மரத்தாண்டவர் 



படம் 2 - கால் ஊனமுற்றோரை நடக்க வைக்கும் மலேசியா பஹாங் மாரான் மரத்தாண்டவர் பால தண்டாயுதபாணி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்