கோவில் 142 - தாம்பரம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-142
குருவுக்கு குருவான தாம்பரம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி கோவில்
28.10.21 வியாழன்
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
கந்தாஸ்ரமம்
சேலையூர்
கிழக்கு தாம்பரம்
சென்னை-600073
இருப்பிடம்: தாம்பரம் 3 கிமீ
மூலவர்: சுவாமிநாதர்
தலப்பெருமை:
தாம்பரம்–வேளச்சேரி சாலையில் தாம்பரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் குருவுக்கு குருவான கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. 12 அடி உயரமுள்ள முருகப்பெருமானுடன் எல்லா தெய்வங்களும் சிறப்பான பலங்களை அருளும் இடம் இத்தலம்.
முருகபெருமானை போற்றும் கவசப் பாடல்களுள் சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய ‘கந்த குரு கவசம்’ குறிப்பிடத்தக்கது. 447 வரிகளுடன் கூடிய இப்பாடலைப் பாடித் துதிக்க, இறையருள் கைகூடும் என்பது பக்தர்களின் தீர்க்கமான நம்பிக்கை.
பாடலின் சில வரிகள்
‘கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே!
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே!
கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே!
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்!
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ………”
தினமும் மதியம் அன்னதானம் நடக்கும் சிறப்பான தலம். அன்னதான மண்டபத்தில் அன்னபூரணி தனி பீடத்தில் அருளுகிறாள். கோபுரங்கள் ஒடிசா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தியானம் செய்ய மண்டபம் உள்ளது.
தல வரலாறு:
1965-ல் சேலம் கந்தாஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகள் (நமது பதிவு-11 நாள் 19.6.21 & மீண்டும் 19.6.22) சென்னை கிழக்கு தாம்பரத்தில் சேலையூரில் ஸ்தாபித்த கந்தாஸ்ரமம் மிகவும் கீர்த்தி பெற்றது.
தல அமைப்பு:
இத்தலத்தின் கருவறையில் மூலவர் சுவாமிநாத சுவாமி என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் பொலிவான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பழனியைப் போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்துள்ளார். மேற்கு பார்த்த முருகனை வணங்கினால் ஞானம், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில், கேட்ட வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார்.
சூரனை வதம் செய்வதற்காக தாயை வணங்கி, வேல் பெற்றதை நினைவு படுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் எதிரில், பணிவுடன் நிற்கிறார். தந்தைக்கே பாடம் சொல்லிக்கொடுத்தால் ஏற்பட்ட “சுவாமிநாதர்” என்ற திருநாமத்துடன் “குருவின் குருவாக” அருள்பாலிக்கிறார். குருபெயர்ச்சி நாளில் இவரை வணங்குவது சிறப்பு.
கந்தசஷ்டி விரதத்தை ஒட்டி ஆறு நாட்களும் இவருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. இவரது கோஷ்டத்தில் பாலமுருகன், கதிர்காம முருகன், அறுபடை வீடு முருகன் மற்றும் ஒன்பது வகையான முருக வடிவங்கள் உள்ளன.
கோவிலின் நடுவே ஐந்தடி உயரத்தில் பஞ்சலோகத்தில் மகாமேரு அமைந்து உள்ளது. இதற்கு அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி திதிகளில், நவாவர்ண பூஜை (மாலையில்) நடக்கிறது. இதில் ஆட்சி செய்யும் திரிபுரசுந்தரியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகும் என்கின்றனர். தினமும் மாலை 4.30–5.30 மணிக்கு ஸ்ரீதுர்கா ஸப்தசதி பாராயணமும், அஷ்டலட்சுமியின் அருள்வேண்டி தினமும் காலை 7 மணிக்கு கோபூஜையும் நடக்கிறது.
விநாயகரின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி, சென்னை கந்தாஸ்ரமத்தில் அருளுகிறார். 12 அடி உயரம், 5 முகம், 10 கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் அபயம், வரம், பாசம், தந்தம், உருத்ராட்ச மாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் ஏந்தி அருளுவது சிறப்பு. சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும் .கோஷ்டத்தில் பாலகணபதி, பஞ்சமுக ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி உள்ளனர்.
தஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய லிங்கம் இங்கு உள்ளது. ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையுந்துள்ளது.. தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது. இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும். இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது. இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும். பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் ஆகும். சந்நிதியைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார் உடனுறை வெங்கடாசலபதி, பிரம்மா அருள்கின்றனர்.
19 அடி உயரம் உள்ள, பஞ்சலோகத்திலான பிரமாண்ட சுதர்சனமூர்த்தி கிழக்கு நோக்கியும் அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக சுதர்சன சக்கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார். ஆனால், இங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பது சிறப்பு. சுதர்சனரின் அருகே பிரகலாதனும், எதிரே 5 அடி உயரத்தில் சுதையால் ஆன வெங்கடாசலபதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அம்சமான தத்தாத்ரேயர், அத்ரி மகரிஷிக்கும் அனுசூயாவுக்கும் அவதரித்தவர். சுமார் 12 அடி உயரத்தில் சிலையாக அமைந்துள்ள இவருக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
10 அடி உயரத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரின் கையில் மான், மழு, சர்ப்பம், நெருப்பு ஆகியன உள்ளன. விசேஷ காலங்களில் இவருக்கும், எதிரே உள்ள லிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷம் மற்றும் ஞாயிறு இராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படும். எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட வருகின்றனர். சுற்றி அஷ்ட பைரவர்கள், சுவர்ணஹர்ஷண பைரவர் அருளுகின்றனர்.
சரபேஸ்வரருக்கு எதிரில் பிரத்யங்கிரா தேவி அருளுகிறாள். இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். இவளது உதவியுடன்தான் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை தணித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 10 அடி உயரத்தில் சிங்கமுகத்துடன் கூடிய இவளது கையில் சூலம், கபாலம், பாசம், டமருகம் உள்ளன. சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவளுக்கு அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. இங்குள்ள யாக சாலையில், தினமும் காலை 9.15 முதல் 11.15 மணி வரை பிரத்யங்கிரா கோடி ஹோமம் நடக்கிறது. தேவதைகளின் அனுக்கிரக சக்தி அதிகரிக்கவும், தெய்வ பலம் ஏற்படவும், சாந்தானந்த சுவாமிகள் கூறியபடி இதற்கான மூல மந்திரங்களை ஒரு கோடி தடவை ஜபித்து, ஹோமங்கள் நடந்து வருகின்றன.
கோவிலின் வாயு மூலையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, கிழக்கே வானர முகம், தெற்கே நரசிம்ம முகம், மேற்கே கருட முகம், வடக்கே வராக முகம், மேல் நோக்கி குதிரை முகம் ஆகியவை உள்ளன. 12 அடி உயரமுடையவர் .கத்தி, சூலம், மரம், மலை, பாசம், அங்குசம், சின் முத்திரை, பிண்டிபாலம், கட்வாங்கம், குண்டிகை ஆகியவற்றுடன் காட்சி தரும் இவருக்கு அமாவாசை, அனுமன் ஜெயந்தி, மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்குகின்றனர். கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் உள்ளனர். பஞ்சலோகத்தில் ஆன பிரமாண்டமான ஐயப்பன் சிலை வேறு எங்கும் இல்லை. அஷ்டா தசபுஜ மகாலட்சுமி, துர்கா தேவி அருள்செய்கின்றனர்.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் 12 அடி உயரத்தில் சனிபகவான் அருளுகிறார். வலதுகாலை காக வாகனத்தில் ஊன்றியபடி நிற்கும் இவரை வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் மூன்று கோலங்களில் சனி பகவான் காட்சி தருகிறார். மாதத்தின் முதல் சனியன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.
திருவிழா:
கந்தசஷ்டி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, பவுர்ணமி, சங்கடகரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, அனுமன் ஜெயந்தி, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு
பிரார்த்தனை:
ஞானம், செல்வம் பெருக, எதிரிகள் தொல்லை, துன்பங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
ஞானம், செல்வம் பெருக அருளும் தாம்பரம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமியை மனமுருக வணங்குவோம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - குருவுக்கு குருவான தாம்பரம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி
படம் 2 - ஞானம், செல்வம் பெருக அருளும் தாம்பரம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி
Thambaram kanthasramam swaminatha swamiku arohara. Thanks for this post Iya
ReplyDelete