கோவில் 141 - புதுக்கோட்டை மாவட்டம் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-141
மன அமைதி தந்தருளும் புதுக்கோட்டை மாவட்டம் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
27.10.21 புதன்
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
மாதவத்தூர்-622301
புதுக்கோட்டை மாவட்டம்
இருப்பிடம்: புதுக்கோட்டை 15 கிமீ
மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி
தல தீர்த்தம்: சங்கு தீர்த்தம்
தல விருட்சம்: பலா மரம்
தலப்பெருமை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து கரம்பக்குடி செல்லும் வழியில் 15-வது கிமீ-ல் மன அமைதி தந்தருளும் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சிறப்புற அமைந்துள்ளது. மாதவத்தூர் தலத்தில், 'மலேசிய கட்டட பாணியில்' கட்டப்பட்ட கோவிலில் கம்பீரமாக முருகன் அருள்பாலிக்கின்றார். இத்தல முருகப்பெருமான் மலேசிய முருகன்' என்றே அழைக்கப்படுகின்றார்
அன்னதானம் இக்கோவிலின் சிறப்பாகும். இக்கோவிலை அன்னதான கோவில் என்றும் அழைப்பர். முருகப்பெருமானுக்கு பிடித்தமான வேலுக்கு பூஜை செய்து அன்னம் படைத்து தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும்.
மாதவத்தூர் முருகன் கோவில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் . நிர்மாணிக்கபட்டுள்ளது. இத்திருத்தலத்தில் மனநிம்மதி அடைய ஜோதி வழிபாடு என்ற ஒன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.. முருக பக்தர்கள் திருவிளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தங்களின் மனதை ஒரு நிலைப்படுத்த, அந்த ஜோதியை நோக்கிப் பார்த்தவாறு தியானத்தில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து 48 நாட்கள், இவ்விடம் வந்து ஜோதிப்பிழம்பாகக் காட்சிதரும் இறைவனை எண்ணி, , உணர்ந்து பிரார்த்தனை செய்தால் மன நிம்மதி அடையலாம் என்பது ஐதீகம்.
காவிரித் தாய்க்கு இங்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் தைப்பூசத்தன்று, புதுக்கோட்டையை சுற்றியுள்ள 400 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். வெளிநாட்டு பக்தர்களும் அதிகம் வருகை தருகின்றனர். பங்குனி தேரோட்டம் அழகு மற்றும் சிறப்பு. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒரு காலத்தில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சேலைப்பட்டி என்ற கிராமத்தையும் பஞ்சம் விட்டு வைக்கவில்லை. அந்த கிராமத்து மக்கள் சிலர் பஞ்சம் பிழைக்க மலேசியா நோக்கி புறப்பட்டனர். அங்கு சென்ற சேலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மலேசியத் தோட்டங்களில் வேலை கிடைத்தது. அப்படி பிழைக்க சென்ற மக்களில் ஒருவர்தான், சுப்பிரமணியன். தன் சிறு வயதில் கல்வி கற்காத நிலையில், மலேசியா சென்றாலும், தன் அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் மூலம் கடுமையாக உழைத்து தொழிலதிபர் ஆனார். ஒருநாள் அவரது வீட்டில் தியானம் செய்து கொண்டு இருக்கும்போது, திடீரென ஓர் அசரீரி ஒலித்து, எம்பெருமான் முருகனுக்கு கோவில் எழுப்பச் சொல்லி இருக்கிறது. அதன்பின், அவரால் புதுக்கோட்டை மாவட்டம், மாதவத்தூரில் எழுப்பப்பட்ட கோவில் இது என்கிறார்கள்,ஊர்ப் பெரியவர்கள்.
தல அமைப்பு:
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை முருகன் போன்று மாதவத்தூர் கோவில் மூலவர் 41/2 அடி உயரத்தில் சிவசுப்ரமணிய சுவாமி என்ற நாமத்துடன் மேற்கு திசை நோக்கி காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார், வேறு எங்கும் இல்லாத வகையில், விசேஷ நாள்களில் பக்தர்களே மூலவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இதனால், முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு
பிரார்த்தனை:
மன நிம்மதி அடைய ஜோதி வழிபாடு, செல்வம், சந்தோஷம் கிடைத்திட
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மாலை 7 வரை
செல்வம், சந்தோஷம் கிடைத்திட அருளும் புதுக்கோட்டை மாவட்டம் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - மன அமைதி தந்தருளும் புதுக்கோட்டை மாவட்டம் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமி
படம் 2 - மலேசிய கட்டட பாணியில்' கட்டப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மாதவத்தூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் (மலேசியா முருகன்)
Mavathoor sivasubramaniya swamiku Arohara. Thanks for this post Iya.
ReplyDelete