கோவில் 52 - வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-52

தேக பலம் அருளும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

30.7.2021 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (கோடை ஆண்டவர்) திருக்கோவில்

வல்லக்கோட்டை-602105

காஞ்சிபுரம் மாவட்டம்

இருப்பிடம்: ஒரகடம் கூட்டு ரோட்டிலிருந்து 4 கிமீ, ஸ்ரீபெரும்புதூர்12 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (கோடை ஆண்டவர்)

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: பாதிரி மரம்

தீர்த்தம்: வஜ்ஜிர தீர்த்தம்

பழமை: 1200 ஆண்டுகள்

பாடியவர்: அருணகிரிநாதர்  (7) 


தலமகிமை:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் கூட்டு ரோட்டிலிருந்து 4 கிமீ தொலைவில் மிகவும் சிறப்பு வாய்ந்த வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


அறுபடை வீடு போல் தனிச் சிறப்பு பெற்றது வல்லக்கோட்டை முருகன் கோவில். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் மூலவர் கிழக்கு நோக்கிய முருகன் சிலையும், உடன் வள்ளி தெய்வானை சிலைகளும் உள்ளன. எதிரே இரட்டை மயில்கள் உள்ளது சிறப்பு. தொலைவில் இருந்து பார்த்தாலும், முருகன் தெளிவாகத் தெரியும்படி உள்ளது. ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலைகள் பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதர் திருப்போரூரை தரிசித்து வழிபட்டு மறுநாள் திருத்தணி செல்லத் திட்டமிட்டார். அன்று இரவு அவரின் கனவில் எழுந்தருளிய முருகப்பெருமான், ‘வல்லக்கோட்டையை மறந்தாயே...’ என்று சொல்லி மறைந்தார். முருகப்பெருமான் சொல்லியருளிய தலத்துக்கு வந்து அங்கு சுப்பிரமணியராய் கோவில் கொண்ட கோடையாண்டவரைத் தொழுது அருணகிரியார் ஏழு திருப்புகழ்களைப் பாடி இந்த இறைவனைத் துதித்து மகிழ்ந்தார்.

கிருத்திகை அன்று காலை 7 மணிக்குள் கோவிலுக்குச் சென்றால், கருவறை தொடங்கி தங்க முலாம் பூசப்பட்ட கருவறை வாயில், சந்நிதி, தூண்கள், மகா மண்டபத்தில் உள்ள மயில் வாகன மண்டபம், கொடிமரம், பலிபீடம், ராஜகோபுர நிலை என எல்லா இடங்களிலும் கண்கவர் வண்ணங்களில் பூக்கள் வரவேற்கும்.


இத்தலம் இந்திரன் முதலான தேவர்கள் முருகனை வழிபட்ட தலம். இந்திரன் இங்கு வந்து தன் வஜ்ஜிராயுதத்தால் பூமியில் குத்தி உருவாக்கிய வஜ்ஜிர தீர்த்தம் இன்றும் உள்ளது. வஜ்ஜிர தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் உடலும் புத்தியும் வல்லமை பெறும் என்பது நம்பிக்கை. ஏழு வாரங்கள் வெள்ளிக்கிழமை தொடர்ந்து முருகப்பெருமானை வழிபட்டு வேண்டுவோர்க்குத் திருமண வரமும் செல்வச் செழிப்பும் ஏற்படும் என்கின்றனர். வினைகள் நீங்கும். இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காது குத்துதல், முடிக்காணிக்கை முதலிய நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். இந்தத் திருத்தலத்தில் திருமணம் செய்துகொள்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. ஞாயிறு, கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களில் முழுநேரமும் கோவில் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மகா அபிஷேகம் நடைபெறுகின்றது.


தல வரலாறு:

வல்லக்கோட்டை புராண காலம் முதல் நிலைத்து விளங்கும் க்ஷேத்திரமாகும். இங்கு வல்லன் என்னும் அசுரன் கோட்டை அமைத்து ஆண்டு வந்தான். தேவர்களுக்கும் முனிவர்களும் தீராத தொல்லைகள் கொடுத்து வந்த இந்த அசுரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து இங்கேயே கோவில் கொண்டருளினார் என்று தல புராணம் கூறுகிறது. முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலமாதலால் அறுபடை வீடுகளுக்கு இணையான மகிமையை உடைய தலமாக இத்தலம் விளங்குகிறது.

இலஞ்சி என்னும் தேசத்தை பகீரதன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவன் அவைக்கு நாரதர் எழுந்தருளினார். மகரிஷியை வரவேற்க வேண்டிய முறைகளை அறியாமல் பகீரதன் நாரதரை அவமதித்தான். இதனால் கோபமுற்ற நாரதர் அங்கிருந்து கிளம்பி தவம் செய்யச் சென்றார். வழியில் கோரன் என்னும் அசுரனைக் கண்டார். அவனிடம், இலஞ்சியை ஆளும் பகீரதனின் தேசத்தை வெல்லுமாறு கூறினார். அதன்படி கோரனும் இலஞ்சி சென்று பகீரதனைப் போரில் வெற்றிபெற்றான். குரு அபராதமே தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்த பகீரதன், நாரத முனியைத் தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தான். நாரதரும் அவனை மன்னித்து மீண்டும் அவன் சகலமும் பெற துர்வாச முனிவரை அணுகி ஆசிபெறும்படிக் கூறினார். துர்வாசரும் பகீரதனுக்கு இரங்கி, பகையை அழிக்கும் வல்லமை தரவல்லவர் முருகக்கடவுளே என்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, பாதிரி மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருள் கிட்டும் என்று உபதேசித்தார். அவ்வாறே பாதிரி மரத்தடியில் எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருமேனியைக் கண்டு விரதமிருந்து வழிபட்ட பகீரதன், மீண்டும் தன் பலங்கள் யாவும் பெற்று பகை வீழ்த்தி தன் நாட்டை அடைந்தான். தனக்கு அருள்பாலித்த முருகப்பெருமானுக்கு பகீரதன் எழுப்பிய ஆலயமே வல்லக்கோட்டை.

தல அமைப்பு:

கோவிலின் கருவறை எந்த நாகரிக அலங்காரமும் இல்லாமல், விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகப்பெருமானை காணும்படி இருப்பது அழகு. இது மைலாப்பூர் கற்பகாம்பாள் கருவறையை நினைவுபடுத்துகிறது. இங்கு கிழக்கு நோக்கிய சந்நிதியில் முருகப்பெருமான், 7 அடி உயரத்தில் சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயரில் வள்ளி, தேவசேனா சமேதராகக் கிழக்கு நோக்கி காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்கிறார். கோடை ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. எதிரே இரட்டை மயில் வாகனம் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு.

இங்கு கணபதி, கருமாரி, திரிபுரசுந்தரி, உற்சவர் முருகர் மற்றும் சண்முகர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன. காமாட்சி மற்றும் ராமர் ஆஞ்சனேயரை தழுவியபடி இருக்கும் சிற்ப வேலைப்பாடுகளும் அருமை. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன.

திருவிழா:

கந்தசஷ்டி, ஆடிக்கிருத்திகை, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் மாதாந்திர கிருத்திகை பரணி, கார்த்திகை, ஞாயிறு


பிரார்த்தனை:

தீராத நோய்கள் தீர, தேகமும், புத்தியும் வல்லமை பெற, திருமண வரம், செல்வம் செழிக்க, வினைகள் நீங்க, இழந்த செல்வம் திரும்பக் கிடைக்க, சகல நன்மைகள் பெற


நேர்த்திக்கடன்:

பால்குடம், முடி காணிக்கை, காது குத்துதல், திருமணங்கள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5.30-1 மாலை 3-8.30 (ஞாயிறு, கிருத்திகை 24 மணி நேரம் திறப்பு)


வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமியை மனமுருக வணங்கினால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - தேக பலம் அருளும் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி  கிருத்திகை நட்சத்திரம் மலர் அலங்காரத்தில்



படம் 2 - இழந்த செல்வம் திரும்பக் கிடைக்க அருளும் 7 அடி உயர வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

Comments

  1. Vallakotai Subramaniya Swamiku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்