கோவில் 51 - புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-51

திருமண வரம் அருளும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்

29.7.2021 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

சாரம்

புதுச்சேரி-605013

இருப்பிடம்: புதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வன்னி மரம்


தலமகிமை:

புதுவை மாநகர் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 2 கிமீ தொலைவில் சாரம் பகுதியில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. புதுச்சேரியின் காவல் தெய்வம் நாகமுத்து மாரியம்மன் வாழும் தலம். சுப்பிரமணியர் திருக்கோவிலில் சஷ்டி விழா மற்றும், சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். மாசி மகம் திருவிழாவில் புதுவை வரும் மயிலம் முருகனுக்கு, இத்தல முருகன் விருந்தோம்பல் செய்வது மிகவும் விசேஷமான அம்சம். பழமையான வன்னி மரத்தடியில் சனி பகவான் விளங்கும் அரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயம் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம்.


ஐப்பசி மாதத்தில் சஷ்டி விழா பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்தில் எட்டு நாட்களும், தைக்கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரத்திலும் முருகன் வீதியுலா வருவார். மாசி மகத்தில் மயிலம் முருகனை வரவேற்று உபசரித்தல், நூற்றாண்டுகளைக் கடந்து நடந்தேறி வருகிறது. விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், நவராத்திரி, பங்குனி உத்திரம், கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்து முருகன் தன்னை நாடி வரும் அடியார்களின் குறைகள் யாவும் தீர்க்கும் வள்ளலாக விளங்குகின்றார். சஷ்டியில் விரதம் இருந்து வழிபடுவோருக்குத் தடைகளை நீக்கி திருமணப்பேறு, மகப்பேறு அருளுகின்றார்.


தல வரலாறு:

புதுவை மாநகரில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது சாரம். இந்தப் பகுதியினரின் காவல் தெய்வமாக விளங்குவது நாகமுத்து மாரியம்மன். இக்கோவில் சிறப்புக்குப் பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் சான்றாக விளங்குகின்றன. இக்கோவிலை வைத்தே மாரியம்மன் கோவில் வீதி ஏற்பட்டது. 1880-ம் ஆண்டு இந்த ஆலயத்தில் எதிரில் சற்று தூரத்தில் அரசமரத்தடி விநாயகர் இருந்தார். அவரையும் அந்தப் பகுதியினர் வழிபட்டு வந்தனர். இவரை பக்தர்கள் ‘முத்து விநாயகர்’ என்று அழைத்தனர்.


இந்நிலையில் 1907-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் தேவனூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சனி வீராசாமிப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் முருகப்பெருமான் மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக, அங்கு விநாயகருக்கு அருகில், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலை வடிவங்களை செய்து, அதனை முத்துவிநாயகரின் பின்புறம் அமைத்து முருகப்பெருமான் ஆலயம் எழுப்பினார். 2001-ல் வைத்தீஸ்வரன், தையல்நாயகி, தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரர், ஐயப்பன் சந்நிதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது.


தல அமைப்பு:

சுப்பிரமணியர் கோவில் வீதியில், கிழக்கு முகமாக மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், எழிலான முத்து விநாயகர் நம்மை வரவேற்று காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் கிழக்கில் சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன் விநாயகர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத விஷ்ணு, வடக்கில் பிரம்மா ஆகியோர் சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்க, அதன் அடிப்பகுதியில் துர்க்கை, கோஷ்ட தெய்வமாக வீற்றிருக்கிறார்.


இதன் இடது பின்புறம் முருகப்பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. சிறிய கொடிமரம், பலிபீடம், மயில் இவற்றைக் கடந்ததும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் இரண்டரை அடி உயரத்தில் புதுப்பொலிவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நான்கு கரங்களோடு காட்சி தரும் இத்தல முருகப்பெருமான், மேல் இரண்டு கரங்களில் சூலம், வஜ்ராயுதம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரைகளோடு அருள்புரிகிறார். பின்புறம் வடக்கு நோக்கிய அசுரமயில் எழிலாக அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானின் உருவ அமைப்பு வயலூர், கந்தக்கோட்டம் முருகன் வடிவங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பதற்கு சாரம் முருகன் சிறந்த எடுத்துக்காட்டு.


இவரது கருவறை விமானத்தில் முன்புறம் தன் தேவியர் வள்ளி- தெய்வானையுடனும், வடக்கில் சுவாமிமலை உபதேச காட்சி, மேற்கில் பழனி தண்டாயுதபாணி காட்சி, தெற்கில் அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி ஆகியவை சுதைச் சிற்பங்களாக அமைந்துள்ளன.


முத்துவிநாயகரும், சுப்பிரமணியரும் பிரதான சந்நிதிகளில் விளங்க, வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் சந்நிதிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. ஐயப்பன் சந்நிதி அருகே உற்சவ மூர்த்திகள் மண்டபம் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சந்நிதியின் பின்புறம், தலவிருட்சமாக வன்னிமரம் செழித்தும், பசுமையாகவும் வளர்ந்திருக்க, அதன் அடியில் சனி பகவான் நின்ற கோலத்தில், தமி சிறப்புடன், மேற்கு முகமாய்க் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு அரிதான ஒன்றாகும். சனி தோஷம் உள்ளவர்களுக்குச் சிறந்த வரப்பிரசாதி இவர்.


திருவிழா:

கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, பிரதி செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

திருமணம் வரம், மகப்பேறு வேண்டி, குறைகள் தீர, படிப்பு/தொழில்/வாழ்க்கையில் புகழ் பெற


நேர்த்திக்கடன்:

சஷ்டி விரதம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-9


புகழ் பல அருளும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியரை கண் குளிர தரிசித்து மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏


படம் 1 - திருமண வரம் அருளும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர்



படம் 2 - புகழ் பல அருளும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர்

Comments

  1. Puducherry Saram Subramaniayaruku Arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்