கோவில் 50 - சென்னை கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-50
ஐஸ்வர்யம் பெருக அருளும் சென்னை கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில்
28.7.2021 புதன்
அருள்மிகு கந்தக்கோட்டம் கந்தசுவாமி திருக்கோவில்
கந்தக்கோட்டம்
பார்க் டவுண்
சென்னை-60003
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 850 மீ
மூலவர்: கந்தசுவாமி
உற்சவர்: முத்துக்குமாரர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மகிழமரம்
தல தீர்த்தம்: சரவணபொய்கை
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
பாடியவர்கள்: வள்ளலார், பாம்பன் சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள்
தலமகிமை:
சென்னை மாநகரில் சென்ட்ரல் ரயில் நிலையம்/பார்க் ரயில் நிலையம்/சென்னை மெட்ரோ/பாரி முனை பேருந்து நிலையம் அருகில் 5-10 நிமிட நடைபயணத்தில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும்.
பொதுவாக மூலவரின் பெயரிலேயே தேவஸ்தானம் அழைக்கப்படும். கந்தகோட்டத்தில் மூலவருக்கு நிகரான சக்தி உற்சவருக்கு {முத்துக்குமாரசுவாமி] இருப்பதால் கந்தசுவாமி கோவிலென அழைக்கப்படும் இக்கோவிலுக்கு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு 1928 முதல் நடைபெறும் கந்தசஷ்டி கோடி அர்ச்சனை மிக பிரசித்தி பெற்றது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுவது சிறப்பு.
பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். ஐஸ்வர்யம் பெருக ஒவ்வொரு செவ்வாயன்றும் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்வர். குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் சித்தி புத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவர். பால் காவடி, பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் என பல்வேறு வகைகளில் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
வள்ளலார் (இராமலிங்க அடிகளார்) திருவருட்பாவில் பாடிய தலம் இது. பாடல்:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்!
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்!
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்கவேண்டும்!
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்!
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்!
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்!
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சி தந்த முருகன், “தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோவில் கட்டும்படியும் கூறியருளினார்". கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்ற போது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கந்தசுவாமி என பெயரிட்டு பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினர். பழமையான இத்தலமே கந்தக்கோட்டம் என்றழைக்கப்படுகிறது.
தல அமைப்பு:
ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது. இங்குள்ள கோபுரம் 5 நிலைகளை கொண்டது. கருவறையில் கந்தசுவாமி தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இரு புறமும் வள்ளி, தெய்வானை தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடி மரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது.
.உற்சவர் முத்துக்குமாரர் தனிக் கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர் . சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சந்நிதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.
திருவிழா:
தை மாதம் (18 நாள் திருவிழா), கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம், வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், பிரதி செவ்வாய், வெள்ளி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம், கல்வி மேம்பட, வேலை பெற, ஐஸ்வர்யம் பெருக, குடும்பம் சிறக்க, தோல் நோய், பிற நோய்கள், கட்டிகள் குணமாக
நேர்த்திக்கடன்:
கோமாதா பூஜை, கோமாதா உணவு (பழங்கள்,கீரை), வெல்லம் கரைத்தல், பால்குடம், காவடி, முடி காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4-9
ஞானம், கல்வி மேம்பட அருளும் கந்தக்கோட்டம் கந்தசுவாமியை கணநேரமும் நினைத்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கஷ்டங்கள் தீர்க்கும் கந்தசுவாமி, கந்தக்கோட்டம், சென்னை
படம் 2 - ஐஸ்வர்யம் பெருக அருளும் சென்னை கந்தக்கோட்டம் உற்சவர் முத்துகுமாரர்
Chennai kandha samiku, Muthukumara swamiku Arohara. Thanks for this post Iya
ReplyDelete