கோவில் 419 - கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-419
வாழ்க்கையை வளமாக்கும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில்
1.8.2022 திங்கள்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
கண்ணம்பாளையம்-641402
கோயம்புத்தூர்
இருப்பிடம்: பாப்பம்பட்டி பிரிவிலிருந்து 3 கிமீ, காந்திபுரம் 19 கிமீ
மூலவர் தண்டாயுதபாணி சுவாமி
தீர்த்தம்: சரவண தீர்த்தம்
தலமகிமை:
கோவை–திருச்சி நெடுஞ்சாலையில், அர்த்தமண்டபத்தில் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து 3 கிமீ தொலைவில் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து 65, 65 A எண் பேருந்தில் 19 கிமீ தூரம் பயணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இக்கோவில் கோவை பழனி என்றும், கண்ணம்பாளையம் பழனியாண்டவ்ர் கோவில் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதி போலவே முனைவர் சென்னியப்பர் கண்ணம்பாளையம் பழனியாண்டவர் அனுபூதி இயற்றியுள்ளார்.
27 படிகள் ஏறினால் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடையலாம். 27 படிகள் 27 நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் நட்சத்திரங்களின் படி காலை 10 மணி அளவில் நடைபெறும் படி பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
ஒரு சமயம் பழனிக்கு சென்று வந்த பக்தர்கள் மனதில் கிழக்கு நோக்கிய நம் ஊர் கோவிலை பழனியைப் போல் மேற்கு நோக்கிய கோவிலாகக் கட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 2012 ஆண்டு பழனியில் பங்குனி உத்திர வழிபாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியதும் பெரியவர்களையும் சான்றோர்களையும் சந்தித்து ஆலோசனை பெற்று, கிழக்கு நோக்கிய கோவிலை மேற்கு நோக்கிய மாடக்கோவிலாக மாற்றிக் கட்ட முடிவு செய்தனர். 8 ஆண்டுகளில் கோவில் செயல் வடிவம் பெற்றது. செய்குன்று வடிவில் அமைந்த ஆலயத்தில் கீழ் மாடத்தில் விழா மண்டபம், மேல் மாடத்தில் கருவறை, அர்த்தமண்டபம், ஈரடுக்கு மகாமண்டபம், பள்ளியறை, 5 நிலை ராஜகோபுரம், மூலவர் விமானம் என அனைத்து பணிகளும் முடிந்து, 14.5.21-ல் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில் கோவை பழனி என்றும், பழனியாண்டவர் கோவில் என்றும் சிறப்புற அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் செவ்வாய், சஷ்டி, திருத்திகை ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மற்றும் பிரதிஷ்டா தினம் எனும் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றன தைப்பூசப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி குமார வேள்வி, 108 சங்காபிஷேகம், கோ பூஜை, ரிஷப பூஜை, அஸ்வ பூஜை சூரியப் பொங்கல், சுமங்கலி வழிபாடு, முருக வேள்வி, லட்சுமி வேள்வி, வள்ளி, தெய்வயானை திருமண வைபவம், திருத்தேர் உலா, பேரொளி வழிபாடு என 11 நாட்கள் நடைபெறும் பெரு விழாவாகும். மாலை 6 மணி அளவில் 'நிலா பிள்ளைக்கு சோறு மாற்றுதல்' நிகழ்வில் தினமும் ஒவ்வொரு நாளுக்கும் உகந்த சாதம் பயன்படுத்தும் பாங்கு, :பாரம்பரிய கிராமிய உணர்வைப் பறைசாற்றுகிறது. தண்டாயுதபாணி கிடா வாகனம், மயில்வாகனம் சூரிய பிரபை ஆகிய வாகனங்களில் உலா வரும் காட்சி கண்களை விட்டு அகலாது. வைகாசி விசாகப் பெருவிழாவில் காலை 9 திருமுறைகள் வேள்வி, 108 வலம்புரி சங்காபிஷேகம், திரவியாபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், மாலையில் உட்பிராகார திருத்தேர் புறப்பாடு விமரிசையாக நடைபெறும்.
இத்தலத்து தண்டாயுதபாணியை வேண்டி வந்தவர்கள் அனைத்து சௌபாக்யங்களையும் பெறுகின்றனர். குரு தோஷ நிவர்த்திக்கு இவர் கண் கண்ட தெய்வம். ஞான வடிவாகி தண்டம் ஏந்திய நிலையில் விளங்குவதால், இவரை வழிபட்டு குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது என்றெல்லாம் சொல்கின்றனர். செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம். சுவாமி சன்னதியில் திருமணம் செய்து கொண்டால், அறுமுகனின் நேரடிப் பார்வைபடும்; அதனால் மணமக்கள் நலமும் வளமுமாக நல்லன்புடன் வாழ்வர் என்பது திருமணம் செய்து கொள்வோரின் நம்பிக்கையாக உள்ளது.
தல வரலாறு:
பொதுவாக கோவை விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பழனி முருகன்தான் கண் கண்ட தெய்வம். அதுவும் தைப்பூசம் விரதமிருந்தும், பங்குனி உத்திரத்தின் போதும் காவடி சுமந்து குழுவாக பழனி முருகன் கோவிலுக்குப் பாத யாத்திரையாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவதை தொன்று தொட்டுச் செய்து வருகின்றனர். அதோடு, மாதம் ஒருமுறை கிருத்திகை அன்றும் பாதயாத்திரை மேற்கொள்வர். அக்காலத்தில் ஒரு சமயம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சில பக்தர்களுக்கு வயது மூப்பின் காரணமாக பழனி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அவர்கள் பஞ்சலோகத்தாலான வேல் ஒன்றைத் தயார் செய்து, பழனி சென்று முருகன் பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்து வந்து, தங்கள் ஊர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சிலை அருகே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
இவ்வூரை சேர்ந்த துறவியான மாரப்ப கவுண்டர் தீவிரமான முருக பக்தர். இவர் பல வருடங்கள் பழனி சாது சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து பழனி தண்டாயுதபாணிக்கு கைங்கர்யம் செய்து வந்தார். மேலும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் பழனி முருகனைத் தொட்டு அபிஷேகம் ஆராதனை செய்ய கோவில் நிர்வாகம் அவருக்குச் சிறப்பு அனுமதி அளித்திருந்தது. ஒரு நாள் அவரது கனவில் பழனி முருகப்பெருமான் தோன்றி, 'நானே உங்கள் ஊரில் வாசம் செய்யும் போது நீ ஏன் இங்கு இருக்கிறாய்? இனி நீ உங்கள் ஊரிலேயே எனக்குக் கைங்கரியங்கள் செய்து வா. உன்னால் கோவிலும் நல்ல முன்னேற்றம் அடையும். பொதுமக்களின் ஆதரவும் பெருகும்' எனக்கூறி மறைந்தார். உடனே புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார். அவரது வருகையால் ஊர் மக்களும், கோவில் கீழ் நிர்வாகத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர். அவரும் செவ்வனே முருகனுக்கு பூஜை செய்து வந்தார். அப்போது ஊர்ப் பெரியவர் ஒருவர் 51 தென்னை மரங்களுடன் கூடிய நிலத்தை கோவிலுக்குத் தானமாக வழங்கினார். இன்னொரு பக்தர் கோவிலில் ஆண்டுமுழுக்க தீபம் ஏற்ற எண்ணெய் வழங்கியதுடன், தன் சந்ததியினரையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தல அமைப்பு:
ஐந்து கலசங்களைத் தாங்கிய 75 அடி உயரமுள்ள ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. இதில் முருகனின் பல்வேறு திருஉருவங்கள், மயில், கலைஞர்கள், இவ்வூர் சுதந்தரப் போராட்ட வீரர்கள், தேசியத் தலைவர்கள், இக்கோவிலுக்கு உழைத்த பெருமக்கள் என 150 சுதைச் சிற்பங்கள் இடம்பிடித்துள்ளன. அடுத்து முழுமுதற் கடவுளான நர்த்தன விநாயகரைக் கண்டு தொழலாம். தெற்கு முகமாக வலம் வந்தால், 12 ராசிப் படிகளைக் காணலாம். தங்கள் ராசிக்கு ஏற்ப இங்கும் படி பூஜை மேற்கொள்ளலாம்.
மேல் மாடத்தில் நாம் முதலில் காண்பது கலை நுணுக்கத்துடன் பித்தளையால் வேயப்பட்ட 33 அடி கொடிக்கம்பம். அடுத்து தனி விமானத்துடன் கூடிய மயில் மண்டபம் . மகா மண்டப முகப்பில் அமைந்த சால கோபுரத்தில் பழனி ஆண்டவர், அவ்வையார், அருணகிரிநாதர் ஆகியோரது சுதைச் சிற்பங்கள் உள்ளன. எட்டுத் தூண்கள் தாங்கிய விசாலமான மகா மண்டப எழிலுடன் திகழ்கின்றது. ஒவ்வொரு தூணிலும் யாழியுடன் கூடிய யானை உருவங்கள் கண்ணைச் கவரும் வகையில் உள்ளன. மேல் விதானத்தில், பழனியில் உள்ளதைப் போலவே அஷ்ட லட்சுமிகளின் சுதைச் சிற்பங்கள் இருப்பதைக் காணலாம். மண்டபத்தின் வடபுறத்தில் கனகசபை, பள்ளியறை எதிரே கந்தன் புகழ்பாடும் அடியார்களான அகத்தியர், நக்கீரன், அவ்வையார், போகர், புலிப்பாணி, கந்தர் சஷ்டி கவசம் இயற்றிய பாலதேவராயர், குருபரர், அருணகிரிநாதர், வள்ளலார், கச்சியப்ப முனிவர், பாம்பன் சுவாமிகள் மற்றும் கிருபானந்த வாரியார்சுவாமிகள் ஆகியோருக்கு மண்டபம் அமைந்துள்ளது.
அர்த்தமண்டபத்தில் உற்சவர் வீற்றிருக்க, கருவறையில் பழனியாண்டவர் விசிறி மடிப்புடன் கூடிய கிரீடத்தை தாங்கி, ராஜ அலங்காரத்தில் இடது கையை இடுப்பில் வைத்து, வலக்கையில் தண்டத்தை ஏந்தி நின்ற நிலையில், புன்னகை ததும்பும் எழில் முகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூலவரின் கருவறை மீது ஏக கலசம் தாங்கிய மூன்று நிலை விமானத்தில் காவடிக் குழு, வள்ளி திருமணம் போன்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன.
பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் 'தாரை' இருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு முருகனுக்கு மேல் தாரை அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். அக்னி நட்சத்திர கால கட்டத்தில் முருகனைக் குளிர்விப்பதற்காக இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளனர். தீர்த்தம் கொண்டு வருவதற்காக சுமார் 25 பேர் சைக்கிளில் திருமூர்த்தி மலைக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்த்தத்தை முருகன் சிரசிற்கு மேலுள்ள பானையில் ஒவ்வொரு துளியாக சிரசின் மீது விழும் நிகழ்வு அரிதான ஒன்று.
.திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, வருஷாபிஷேகம், பிரதி செவ்வாய், சஷ்டி, திருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் வளம் பெற, குரு தோஷம் நிவர்த்தி பெற, கல்வி, ஞானம் சிறக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க,
நேர்த்திக்கடன்:
படிப்பூஜை, பாதயாத்திரை, காவடி, அபிஷேகம். அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 5-8
சகல சௌபாக்யங்களையும் அருளும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - வாழ்க்கையை வளமாக்கும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி - கோவை பழனி
படம் 2 - சகல சௌபாக்கியங்களையும் அருளும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி (கோவை பழனி)
Comments
Post a Comment