கோவில் 417 - கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-417

நினைத்தாலே தடைகளை நீக்கியருளும் கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

30.7.2022 சனி

அருள்மிகு பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

எம்சி.ஹள்ளி-577228

சிக்மகளூரு மாவட்டம்

இருப்பிடம்: பத்ராவதியிலிருந்து 9 கிமீ


மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி தெய்வானை


தலமகிமை:

சிக்கமகளூரு (சிவமொக்கா) மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்.சி.ஹள்ளி என்ற ஊரில் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பத்ராவதி நகர்/தரிகெரேவியில்ருந்து 9 கிமீ பயணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். பத்ரகிரி முருகன் கோவில் பத்ராவதி மற்றும் தரிகெரே தாலுகா பகுதிகளுக்கு இடையே உள்ளே எம்.சி.ஹள்ளியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சக்தி தேவதையாகவும், பத்ரகிரியின் காவல் தெய்வமாகவும் வனதுர்க்கை அம்மன் வீற்றிருக்கிறார்.


இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மகா தீபம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பவுர்ணமி, விசாகம், பிரதோஷம் போன்றவையும் நடைபெறுகிறது. இக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது கார்த்திகை தீப பெருவிழா. திருவண்ணாமலையில் மகா தீபத்தை போல், இக்கோவிலில் கார்த்திகை தீபத்தன்று, கோவிலுக்கு வரும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளின் பெயர்கள் துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு முருகனின் பாதத்தில் வைக்கப்படும். அப்போது முருகனின் அருள் கிடைக்கும் குழந்தையை சக்தி தாயாக பாவித்து, புனித நீராட்டி, மலர் சூட்டி, மங்கள இசை முழங்க, பக்தர்களின் அரோகரா, அரோகரா எனும் கோஷம் முழங்க, நெய் கலசம் ஏந்தி, குழந்தையின் கரங்களால் அகண்ட தீபத்தில் நெய் வார்க்கப்பட்டு பக்தர்களுக்கு மகாஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது சிறப்பாகும்.


இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், ஜாதக பொருத்தமின்மை, திருமணத்தடை ஆகியவை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், செல்வம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர என அனைத்து வேண்டுதல்களும் முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள், திங்கட்கிழமை அன்று இரவே கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு முதல் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல், செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் திருமணத்தடை, ஜாதக பொருத்தமின்மை, புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்தால், தடைகள் நீங்கி, நினைத்தது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.


தல அமைப்பு:

கோவில் நுழைவு வாசலில் கடந்ததும், மலையடிவாரத்தில் தென்படுவது அகத்தியர் மண்டபத்தில் அகத்தியர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அடுத்து சக்தி தேவதையாகவும், பத்ரகிரியின் காவல் தெய்வமாகவும் வனதுர்க்கை அம்மன் வீற்றிருக்கிறார். வனதுர்க்கை அம்மன் அஷ்ட புஜங்களுடனும், அக்னி ஜுவாலையுடனும், பிறைசூடி சாந்தரூபினியாகவும், எழிலுடனும், அம்மன் திருக்கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், வில், குவளை, அமிர்த கலசம் ஏந்திய நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்கிறார்.


அதையடுத்து மண்டப தூண்களில் ஹரியும், சிவனும் ஒன்றே என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும்படியாக சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. மத்தவாச்சாரியர் வசிஷ்ட மகா முனிவர், விஸ்வாமித்திரர், ரேணுகாதேவி, பெரியநாயகி ஆகிய மகான்களும், அர்த்தநாரீஸ்வரர், காயத்திரி தேவி, கங்காதேவி, அம்பிகாதேவி, நாகதேவி, துர்காதேவி முதலான தெய்வங்கள் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியருள்கிறார்கள். தொடர்ந்து மூலவர் சந்நிதானத்துக்கு செல்லும் மலைப்பாதையில் பஞ்சமுக விநாயகர் நின்ற கோலத்தில் தனிக் கருவறையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் விநாயகர் வீற்றிருக்கும் சந்நிதியில், சித்தி-புத்தி என்னும் பொருளுடன் கலையரசியான சரஸ்வதி தேவி வீணை ஏந்தி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வடபுறத்தில் மகாலட்சுமி அமர்ந்த கோலத்தில் காட்சியருள்கிறார்.


தொடர்ந்து ஆதி விநாயகர் அருளுகிறார். அடுத்து மிகவும் பழமையான அரசமரம் இருக்கிறது. அதனடியில் நாகதேவதை சிலைகள் உள்ளன. இதனருகே பக்தர்களின் செவ்வாய்தோஷம், ராகுதோஷம், சந்தன தோஷம் போன்ற தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய பரிகார மண்டபங்கள் அமைந்துள்ளன. அதையடுத்து இரும்பாசூரனும், பரிகார தெய்வங்களும் உள்ளனர். அடுத்து 110 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் ராஜகோபுரத்தை காணலாம். அங்கிருந்து மயில் தோகை விரித்தாற் போன்று இருவழிப்படி மண்டபம் அமைந்துள்ளது. அடுத்துள்ள கொடிமரத்தின் முன்பு பக்தர்கள் மண்டியிட்டு முருகனை நினைத்து வேண்டினால் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.


கருவறையில் மூலவரான முருகன் பொலிவான தோற்றத்துடன் சிவசுப்பிரமணி சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையை சுற்றி மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் பலிபீடம், மயில் வாகனம் அமைந்திருக்கிறது. இருபுறமும் துவார சக்தி காவல் தெய்வமாக இருக்கிறார்.


கருவறையின் தென்புறத்தில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. பலி பீடம், மகா நந்தி ஆகியவை சிவன் சந்நிதியின் கருவறைக்கு நேர் எதிரில் அமைக் கப்பட்டு உள்ளது. இந்தக்கோவிலில் வித்தியாசமாக நந்தி பகவான், மனித உடல் அமைப்புடன் காட்சி தருகிறார். இது இக்கோவிலில் உள்ள சிறப்பம்சம் ஆகும். சிவபெருமான் லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். லிங்கத்தின் பின்புறத்தில் சூரியனும், சந்திரனும் ஒரு சேர அமைந்திருப்பதை பார்க்க கண்கொள்ளா காட்சி.: அதையடுத்து மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர், அப்பர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார் திருமேனியும், 63 நாயன்மார்களும் வீற்றிருக்கிறார்கள். கோவிலில் முருகன் சந்நிதி வடபுறத்தில் 12 ராசிகள் உள்ளடங்கிய புரவி பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் உற்சவர் மணிமண்டபம் அமைந்துள்ளது.


.திருவிழா:

ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மகா தீபம், தைப்பூசம், அனைத்து பவுர்ணமி, விசாகம், பிரதோஷம்


பிரார்த்தனை:

செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம் நீங்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, செல்வம் பெருக, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம். அலங்காரம், சிறப்பு பூஜைகள்


பித்ரு தோஷம் நீக்கும் கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏


படம் 1 - நினைத்தாலே தடைகளை நீக்கியருளும் கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - பித்ரு தோஷம் நீக்கும் கர்நாடகா சிக்மகளூரு மாவட்டம் பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்