கோவில் 415 - தாராபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-415
அன்னாபிஷேகம் நடக்கும் அழகு முருகனின் தாராபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில்
28.7.2022 வியாழன்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
தாராபுரம்-638656
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
இத்தலத்தில் மாசி மாதத்தில் மகா அன்னாபிஷேகம் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. பொதுவாக, அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனிக்குச் செய்வார்கள். ஆனால், இங்கே முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள். அந்த நாளில், ஊர்மக்கள் தங்கள் வீட்டில் இருந்து அரிசி, நெல், பருப்பு என ஏதேனும் தானியங்களை எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த அன்னாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல், முருகப்பெருமானுக்கு கனிகள் மற்றும் பட்சணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வதும் காணக் கிடைக்காத தரிசனம் எனப் போற்றப்படுகிறது.
பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் தீராத நோயால் அவதிப்படுவோரும் இந்த நாளில் விரதமிருந்து, அபிஷேகம் செய்த அன்னத்தைச் சாப்பிட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்; நோய்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!
வைகாசி விசாக நாளில், இங்கு நடைபெறும் சத்ரு சம்ஹார சடாக்ஷர ஹோமத்தில் கலந்துகொண்டு, சங்கரன் மைந்தனை லட்சார்ச்சனையில் கலந்துகொண்டு தரிசித்தால், தீய சக்தி அண்டாது, எதிரிகள் தொல்லை ஒழியும், வியாபாரம் விருத்தியாகும், திருமணத் தடை அகலும், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
தல வரலாறு:
சில நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த இடத்தில் வன்னி மரம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அந்த மரத்தின் கீழே சிறியதொரு கல் வடிவில் சுயம்பு மூர்த்தம் தோன்றியது என்கிறது தலவரலாறு. ஆரம்பத்தில் அந்தக் கல்லையே கடவுளாகப் பாவித்து ஊர்மக்கள் வழிபடத் துவங்கினர். பிறகு ஊர்ப்பெரியவர்கள், 'இது முருகப்பெருமான்தான். எனவே அவருக்கு விக்கிரகம் அமைத்து வழிபடுவோம். இந்தச் சுயம்புக்கும் சந்நிதி வைப்போம்’ என்று சொல்ல, அழகே உருவெனக் கொண்டு முருகப்பெருமானின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முன்னதாக, விக்கிரகம் அமைக்கலாமா என்று அருகில் உள்ள பழநி முருகப்பெருமானிடம் உத்தரவு கேட்கப்பட்டதாம். அசரீரியாக அனுமதி கிடைத்ததும், பழநியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே ஆலயம் எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள் பக்தர்கள். வன்னி மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றிய கல்லை சுமார் 60 அடி ஆழத்தில் அமர்த்தி, அதில் பஞ்சலோகத்தால் ஆன கம்பி ஒன்றை வைத்து, அக்குழியை நவதானியங்களாலும் மூலிகைகளாலும் நிரப்பி, யந்திரப் பிரதிஷ்டை செய்து, அதன் மேல் முருகப்பெருமானுக்கு சந்நிதி அமைக்கப் பட்டுள்ளது. அன்று முதல் இன்றளவும் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்து மக்களைக் காத்தருள்கிறார் சுப்ரமணிய சுவாமி!
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அழகிய கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். செவ்வாய்க்கிழமையன்று, தங்கள் ஜாதகத்தை முருகக் கடவுளின் திருவடியில் வைத்து, செவ்வரளிப் பூ சார்த்தி, இரண்டு நெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விநாயகர், அமுதகரேஸ்வரர்,சனீஸ்வரர், தேவியருடன் நவக்கிரக மூர்த்திகள் அருள்புரிகின்றனர்.
திருவிழா:
மாசிமகம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்யாண வரம் கைகூட, சகல நோய்கள் நீங்க, எதிரிகள் தொல்லை ஒழிய, வியாபாரம் விருத்தியாக, தம்பதி ஒற்றுமை மேலோங்க
நேர்த்திக்கடன்:
அரிசி, பருப்பு தானியங்கள் காணிக்கை, அன்னாபிஷேகம், சத்ரு சம்ஹார பூஜை, அபிஷேகம். அலங்காரம், பூஜைகள், அன்னதானம்
தம்பதி ஒற்றுமை மேலோங்கிட தாராபுரம் சுப்ரமணிய சுவாமியை மனதார வேண்டி நற்பலன்கள் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - அன்னாபிஷேகம் நடக்கும் அழகு முருகனின் தாராபுரம் சுப்ரமணிய சுவாமி
படம் 2 - தம்பதி ஒற்றுமை மேலோங்கிட அருளும் தாராபுரம் சுப்ரமணிய சுவாமி
Comments
Post a Comment