கோவில் 381 - காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-381
திருப்பம் தருவான் காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி கோவில்
24.6.2022 வெள்ளி
அருள்மிகு மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி திருக்கோவில்
குமரன்கரடு,
காசிபாளையம்-638454
கோபிசெட்டிபாளையம் வட்டம்,
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: கோபி 10 கிமீ, சத்தியமங்கலம் 16 கிமீ
தொடர்பு: 9786285405/8248004435
மூலவர்: மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்-சத்தியமங்கலம் சாலையில் கோபியிலிருந்து மேற்கே 10 கிமீ தொலைவிலும் சத்தியிலிருநது கிழக்கே 16 கிமீ தொலைவிலும் பவானி ஆற்றங்கரையில் உள்ள காசிபாளையம் எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் கிழக்கே சுமார் 1 கிமீ தொலைவில் சத்தி-நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் மூன்று சிறு சிறு குன்றுகள் கிழக்கு மேற்காக வரிசையாக அமைத்துள்ளன. அதில் மேற்குப் பகுதியில் உள்ள குன்றில் அ/மிக மாதேஸ்வரன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கிழக்குப் பகுதியில் உள்ள குன்றில் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் பல திருத்தலங்களில் பல கரங்களுடன், பல திருமுகங்களுடன் காட்சியளித்தாலும் மூன்று முகம் உடைய முருகன் கோவில். அபூர்வமாக, தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் சிவகிரி, குமரன் கரடு என்று அழைக்கப்படும் குன்றில், மூன்று முகமும் ஆறு திருக்கரங்களுடனும் நின்றவாறு அருள் பொழிகின்றார்,
முருகப்பெருமான், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய 3 சக்திகளின் திருவுருவாக மும்முகம் கொண்டு மக்களுக்கு நலம் அருள்வதற்காக உருவெடுத்து குடிகொண்டார். குமரன் குடிகொண்ட கரட்டில் பதினென் சித்தர்களும் அரூப நிலையில் வந்து ஈசனையும் முருகனையும் வணங்குவதாக ஐதிகம்! இங்கு முருகப்பெருமான் தவக்கோலத்தில் வீற்றிருந்து பதினெண் சித்தர்கள் சபையினை பேராட்சி செய்கின்றார்.
முருகன் திருக்கோயில்களின் கருவறைக்கு முன்பு மயில் அமைந்றிருக்கும். ஆனால் இந்திருக்கோயில் முன்பு சக்திவேல் நியைப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபதுமனை வதம் செய்ய உமையவளால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற பிரணவ எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ராயுதயும் பொறிக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு
இக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது.. இக்கோயிலை பழமை மாற்றாமல் புதுப்பிக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்காக ஊரே கூடி, உருவானது மூன்று முகம் ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்.
தல அமைப்பு:
கோவிலின் முன்பு படிப்பிள்ளையார் எழுந்தருளிகிறார். மேலும் மகாமண்டபத்தின் முன்பு இடும்பர், கடம்பர் சிலைகளும் ,கோவிலின் திருப்பணிகள் ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி திருக்கோவில் அறக்கட்டளை என்ற அமைப்பால் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
கோவில் கருவறையில் மூன்று முகம், ஆறு கரங்களுடன் கூடிய முருகப்பெருமான், முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருப்பெயருடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். பெருமானின் வலது புறம் உள்ள கரங்களில் வஜ்ராயுதம், அம்பு மற்றும் சின்முத்திரை சிறப்பு. இடது கையில் மூன்று கரங்களில் மண், வில், அபயகரங்களுடன் பாம்பும் பின்புறம் மயில் இருப்பது சிறப்பம்சம்
.
கோவிலின் பின்புறம் ஸ்ரீ சக்கரத்தின் மீது மகா மேரு அமைக்கப்பட்டு , சித்தர்கள் சூழ மகா சபை உள்ளது. இங்கு முருகப்பெருமான் சிவகுருநாதராக தவ கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இச்சிறப்பு எங்கும் அமையாத சிறப்பாகும்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, பிரதி வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை
பிரார்த்தனை:
வாழ்வில் திருப்பம் வேண்டி, நினத்தது நிறைவேற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
நினத்ததை நிறைவேற்றும் காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமியை முழு நேரமும் வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - திருப்பம் தருவான் காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி
படம் 2 - நினத்ததை நிறைவேற்றும் காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி
Comments
Post a Comment