கோவில் 17 - தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-17
தோஷங்கள் அனைத்தும் நீக்கி அருளும் தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார் கோவில்
25.6.2021 வெள்ளி
அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோவில்
தீர்த்தத்தொட்டி
கோடங்கிபட்டி-625547
தேனி மாவட்டம்
இருப்பிடம்: தேனி-போடி சாலையில் கோவில் 9 கிமீ
மூலவர்: விருப்பாச்சி ஆறுமுக நயினார்
உற்சவர்: சுப்பிரமணியர்
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: முருக தீர்த்தம் (தீர்த்தத்தொட்டி)
தலமகிமை:
தேனி மாவட்டம் தேனி-போடி சாலையில் 9 கிமீ-ல் உள்ள கோடாங்கிபட்டியில் உள்ள தீர்த்தத்தொட்டி பகுதியில், விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோவில் உள்ளது. கோவிலுக்கு அடியில் ‘தீர்த்தம்’ ஒன்று வற்றாமல் எப்போதும் சுரந்தபடியே இருக்கிறது. இதன் பெயராலேயே இத்தலம் ‘தீர்த்தத்தொட்டி’ எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் அசுரனை வதம் செய்யச் சென்ற சப்த கன்னிமார்களில் ஒருவர், தவறுதலாக தவம் செய்துகொண்டிருந்த மகரிஷியை அழித்துவிட்டார். எனவே அவளை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அவள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, முருகப்பெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இன்றைக்கும், பக்தர்கள் இங்கு வந்து தீர்த்த நீராடி ஆறுமுகனை வழிபட்டு பிரார்த்தித்தால், துயரங்கள், தோஷங்கள் தீரும்..
குருப்பெயர்ச்சியால் தோஷம் உண்டானவர்கள், வியாழக்கிழமைகளில் ருத்ரமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்ளலாம். ருத்ரமூர்த்திக்கு ஐப்பசி பவுர்ணமில் அன்னாபிஷேகம் செய்யும்போது, அன்னத்திலேயே ஒரு லிங்கம் பிடித்து, பூ, வில்வம் அணிவித்து, சந்தனம் வைத்து பூஜை செய்கின்றனர். மறுநாள் அதை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். இந்த “அன்ன லிங்க” தரிசனம் மிக விசேஷமானது.
தலவரலாறு:
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு பாத யாத்திரை சென்றார். அவர் பழநி தரிசனம் முடிந்து திரும்புகையில், விருப்பாட்சி எனும் இடத்தில் கலவரம் மூண்டிருப்பதாக வழியில் எதிர்ப்பட்ட பயணிகள் மூலம் அறிந்தார். அதனால் தனது ஊருக்குச் செல்ல முடியாதோ என்று கலங்கினார். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் வேல் ஒன்றை அவரிடம் கொடுத்து, ‘இதன் துணையுடன் ஊருக்குப் போ. உனக்கு எவ்வித தீங்கும் நேராது’ என்று கூறிச் சென்றான். சிறுவனாக வந்து வேல் கொடுத்தது சாட்சாத் அந்த முருகப்பெருமானே என்று கருதிய பக்தரும், வேலாயுதத்தையே துணையாகக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். எந்தவித ஆபத்துமின்றி, இந்தத் தலத்தை அடைந்தார். இங்கேயிருந்த தீர்த்தத்தில் நீராட விரும்பியவர், வேலாயுதத்தை கோவிலில் வைத்துவிட்டு தீர்த்த நீராடி முருகப்பெருமானைத் தரிசித்து அருள்பெற்றார். விருப்பாட்சி எனும் ஊரில் ஏற்பட்ட கலகத் துயரில் இருந்து பக்தனைக் காத்து தன் ஆலயத்துக்கு வரச்செய்து அருள் புரிந்ததால், இந்தத் தலம் மற்றும் முருகனின் பெயரோடு விருப்பாட்சி
எனும் அடைமொழியும் சேர்ந்துகொண்டதாம். பக்தருக்கு முருகன் கொடுத்த வேலாயுதம் மயில் வாகனத்தின் அருகில் நிறுவப்பட்டிருக்கிறது. பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். முருகன் சந்நிதி எதிரில், இந்த வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது.
பல நூற்றாண்டு காலமாக மண்ணுக்குள் புதைந்திருந்த முருகப்பெருமான், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயி ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாராம். தான் கொட்டக்குடி ஆற்றின் கரையில் உள்ள வயலில் புதையுண்டு இருப்பதாகவும், தன்னை எடுத்துப் பூஜை செய்தால் தம்மை வணங்குபவருக்கு வேண்டுவன தந்து அருள்பாலிப்பதாகவும் தனது பக்தனான விவசாயியின் கனவில் அருள்புரிந்து மறைந்தார். இதை அந்த விவசாயி ஊர் மக்களிடமும், அந்தப் பகுதியை ஆண்ட போடி நாயக்கனூர் ஜமீன்தாரரிடமும் தெரியப்படுத்தினார். விவரமறிந்த ஜமீன்தாரரும், ஊர் மக்களும் முருகப்பெருமானை அவர் கூறியது போன்றே சித்திரை பிறப்பு நன்னாளில். கொட்டக்குடி ஆற்றங்கரையில் கண்டெடுத்தார்கள்.
தல அமைப்பு:
கோவில் கருவறையில் ஆறுமுக நயினார் சுயம்புமூர்த்தியாக ஓராறு முகமும் ஈராறு கரங்களும் கொண்டு கிழக்கு நோக்கி அழகே உருவாகக் காட்சித் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவரான ஆறுமுக நயினாரின் அருகில், இடதுபுறம் சிறிய விக்கிரகமாக ஏழுதலை நாகம் புடைசூழ அருள்மிகு நாக சுப்ரமணியர் காட்சி தருகிறார். அதேபோல், இந்தக் கோவிலில் சந்நிதி கொண்டிருக்கும் செல்வகணபதிக்கு அருகில் நாககணபதி வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் நாகசுப்ரமணியருக்கும், நாக கணபதிக்கும் சிறப்பு பாலபிஷேகம் செய்வதால் தோஷம் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
ஆறுமுக நாயனாரின் இடது புறத்தில் ருத்ராட்ச சிவன் காட்சியளிக்கிறார். இங்குள்ள ருத்ராட்ச சிவபெருமான் குருபகவான் அம்சத்தில், சிரசில் ருத்ராட்ச மாலை அணிந்து காட்சியளிப்பது வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பு. எதிரில் நந்தி இல்லை, கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் பெறுபவர்கள், இங்கு வியாழக்கிழமைகளில் ருத்ராட்ச சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். அடுத்து முன்னோடி கருப்பரையும் இங்கே தரிசிக்கலாம்.
திருவிழா:
சித்திரை 1, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்
பிரார்த்தனை:
நாக தோஷம், செவ்வாய் தோஷம், கல்வி சிறக்க, தொழில் மேம்பட, ஐஸ்வர்யம் பெருக
நேர்த்திக்கடன்:
பால்/பன்னீர் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றல்
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 3-8
தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினாரை மனகண்ணால் தரிசித்தால் ஐஸ்வர்யம் பெருகும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 🙏🙏
படம் 1- சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார்
படம் 2 - நாக தோஷங்கள் நீக்கி அருளும் நாக கணபதி, தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார் கோவில்
Comments
Post a Comment