கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-316

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

20.4.22 புதன்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

எல்டாம்ஸ் ரோடு (Eldams Road)

தேனாம்பேட்டை 

சென்னை-600018 

இருப்பிடம்: எழும்பூர்/சென்ட்ரல்/கோயம்பேடு-கோவில் 7/9/10 கிமீ, மைலாப்பூர்/தி.நகர்-கோவில் 2/4 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை

இதர முக்கிய தெய்வம்: இராமலிங்ககேஸ்வரர்


தல மகிமை: 

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சுமார் 150 அடி தூரத்திலேயே இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மாம்பலம் (தி.நகர்) புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ துரத்தில் உள்ளது. ஆதியில் சிவத்தலமாக இருந்த இத்திருத்தலம் சுமார் 50 ஆண்டுகளாக முருகப்பெருமானுக்குரிய கோவிலாக பெருமைப்பெற்றது. தென் சென்னையில் உள்ள முருகன் திருத்தலங்களில் இது ஒரு முக்கியமான திருத்தலமாகும்.


திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டியில் யாக சாலை பூஜை, வள்ளி, தெய்வயானை திருமண உற்சவம், லட்ச்சார்ச்சனை, சுவாமி வீதி உலா புறப்பாடு, 10 நாட்கள் இன்னிசை கச்சேரிகள் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் அன்று சுப்பிரமணியர் வீதி உலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப்பெருமான் வீதி உலா வருவார்.சித்திரை மாதம் பவுர்ணமியன்று புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சி. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் (ஆருத்ரா தரிசனம்) அன்று முதல் நாள் இரவு மஹா அபிஷேகமும் காலை 6.30 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மாள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட விமானப்பட்டறையில் வீதி உலா வருவது சிறப்பு. ஆருத்ரா உற்சவத்திற்கு முன்னதாக 10 நாட்கள் மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெறுகின்றது. மார்கழி மாதம் முழுவதும் காலை 6 மணிக்கே கோயில் திறந்து தனூர் மாத பூஜை நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும், உள்புறப்பாடும் சிறப்பாக நடைபெறுகின்றது.


திருமணம் ஆகாதவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றால், விரைவில் திருமணம் நடக்கும், என்பதும், பிரதோஷ சமயங்களில் சிவனை இங்கு வந்து அபிஷேகம் மற்றும் புறப்பாட்டில் கலந்து கொண்டால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பதும் சிறப்பு அம்சமாகும்.


தல வரலாறு:

இக்கோவில் தற்போது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றழைக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது ஒரு சிவத்தலம் ஆகும். இவ்வாலயத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்கள் அருள்மிகு இராமலிங்ககேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே உள்ளன. மேலும் இத்திருக்கோவிலின் விநாயகர் சன்னதிக்கு எதிரே உள்ள தெரு இராமலிங்கேஸ்வரர் தெரு என்றுதான் இன்று வரை அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதி நிர்மாணிக்கப்பட்டு, புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில், மூலவராக 41/2 அடி உயர சுப்ரமணிய சுவாமி இடுப்பில் கை வைத்து வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்றார். மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி அதிகார முருகன் என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானுக்கு எதிரே அருணகிரிநாதர் சந்நிதி உள்ளது. மரகததாலான மயில் இங்கிருப்பது சிறப்பு.


மேலும், இங்கு விநாயகர், இராமலிங்ககேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள், துர்க்கை, நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பைரவர் முதலான தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். நடராஜப்பெருமான் தனது பிரபஞ்ச நடனத்தில் சிவகாமியுடன் தனி சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கின்றார்..


திருவிழா

தைப்பூசம், கந்த சஷ்டி, சித்ரா பவுர்ணமி, ஆடி வெள்ளி, பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், தமிழ் புத்தாண்டு, பிரதி கிருத்திகை, சஷ்டி

  

பிரார்த்தனை:

சகல சௌபாக்கியங்கள் பெற, திருமணம் பாக்கியம் பெற, நீண்ட ஆயுள் கிடைக்க, வேண்டுவன நிறைவேற  


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், காணிக்கை, அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5-9


நீண்ட ஆயுளை தந்தருளும் தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமியை மனக்கண் மூலம் தரிசித்து பயனடைவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - சகல சௌபாக்கியங்களையும் அருளும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி



படம் 2 - நீண்ட ஆயுளை தந்தருளும் தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 244 - உத்தரகாண்ட் ரிஷிகேஷ் கார்த்திகேயா கோவில்

கோவில் 812 - பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர் கோவில்