கோவில் 692 - சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-692

வியாபாரம் செழிக்க அருளும் சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில்

1.5.2023 திங்கள்


அருள்மிகு குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM004928]

அம்மாபேட்டை

சேலம்-636003

இருப்பிடம்: சேலம் நகர பேருந்து நிலையம் 3 கிமீ


மூலவர்: குமரகுரு சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தலமகிமை:

சேலம் மாநகரில் சேலம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் செங்குந்தர் சமூகத்தினர் அதிகம் வாழும் அம்மாபேட்டையில் வியாபாரம் செழிக்க அருளும் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக குமரகுரு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். திருக்கோவில் மேல் பகுதி மற்றும் தூண்களில் முருகப்பெருமான் மற்றும் சிவபெருமானின் அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. முழுவதும் இக்கோவிலுக்கு அருகில் அஷ்ட சித்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த மூன்று கோவில்களும் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது.


கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் கந்த சஷ்டி திருநாளில் வள்ளி, தெய்வானை சமேத குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்காட்சி அருளுவது சிறப்பம்சம். மாலை சூரசம்ஹாரம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றது. சேலம் மாநகர் மற்றும் இதரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்விலும் 7-ம் நாள் நடைபெறும் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவத்திலும் கலந்து கொண்டு, முருகபெருமான் திருவருள் பெற்று செல்கின்றனர்.


பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். 2,3,4,5-ம் நாள் வரை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் முடிந்து சுவாமி திரு உலா வரவது சிறப்பு. ஆறாம் நாள் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகின்றது. 7-ம் நாள் பங்குனி உத்திர திருநாளன்று பால்குடம், காவடி திருவிழா நடந்து சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். 8-ம் நாள் சுவாமி ஊரவலம் நடக்கும். 9-ம் நாள் சத்தாபரணம், 10-ம் நாள் சுவாமி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மேலும் சஷ்டி, கிருத்திகை உட்பட அனைத்து திருநாட்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறும். வேலனை வேண்டுவோருக்கு வியாபாரம் செழிக்கும். நெசவுத்தொழில் மேம்படும். திருமணம், சந்தான பாக்கியம் கிட்டும், கல்வி, ஞானம் சிறக்கும். நோய்கள் குணமாகும். தோஷங்கள் விலகும்.


சித்திரை திருவிழாவில் (இந்த வருடம் 2.5.2023 செவ்வாய்) மீனாட்சியம்மனுக்கும், சொக்கநதருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக்கக கொண்டாடப்படும். முந்தின நாள் கிருஷ்ணன் புதூர் பரிமளா ரங்கநாதர் கோவிலில் இருந்து தங்கைக்கு சீர்வரிசை புறப்பாடு நடைபெறும்.


தல வரலாறு:

சீர்மிகு செங்குந்தர் மரபினரால் நூறாண்டுகளுக்கு மேல் நிர்வகிக்கப்படும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் 1983, 23.5.1998, 30.6.2018-ல் சிறப்பாக நடைபெற்றது.

தல அமைப்பு:

கோவிலுக்கு எதிரில் மாரியம்மன் கிழக்கு நோக்கி தனிக்கோவிலில் அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் கோவில் இடப்பக்கம் அஷ்ட சித்தி விநாயகர் தனிக்கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோவிலில் நுழைந்த உடன் கொடிமரம், வேல், பலிபீடம், மயில், யானை கருவறை மூலவரை பார்க்க அமைந்துள்ளன. கோவில் முழுவதும் சுவாமி சிற்பங்கள் நிறைந்துள்ளன. கருவறையில் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.


உள் மண்டபத்தில் விநாயகர், ஐயப்பன், ராஜேஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருளுகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், ஆலமர் செல்வர் தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி, பிரம்மா, துர்க்கை அருள்பாலிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் விநாயகர், அஷ்ட தசபுஜ துர்க்கை அம்மன், அஷ்டலட்சுமியர், தலமரத்தடியில் விநாயகர், நாகர்கள் அருளுகின்றனர். அடுத்து சனீஸ்வர், நவக்கிரகங்கள் அருள்புரிகின்றனர். கோவிலில் நுழைந்தவுடன் வலப்பக்கம் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் தனி சந்திதிகளில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இவர்கள் முன் நால்வர், விநாயகர், நடராஜர் அருள்கின்றனர். நுழைவாயில் வலப்பக்கம் பைரவர் தெற்கு நோக்கி அருள்கின்றார்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வருஷாபிஷேகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்திரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி


பிரார்த்தனை:

வியாபாரம் செழிக்க, நெசவுத்தொழில் மேம்பட, திருமணம், சந்தான பாக்கியம் கிட்ட, கல்வி, ஞானம் சிறக்க, நோய்கள் குணமாக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம், திருக்காணிக்கை


நெசவுத்தொழிலை மேம்படுத்த அருளும் சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 692 வியாபாரம் செழிக்க அருளும் சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி  தங்க கவச அலங்காரம்


படம் 2 - 692 நெசவுத்தொழிலை மேம்படுத்த அருளும் சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்