கோவில் 691 - சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-691

திருமண பிராப்தம் அருளும் சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

30.4.2023 ஞாயிறு

அருள்மிகு செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

பாவடி

சேலம்-636001

இருப்பிடம்: சேலம் நகர பேருந்து நிலையம் 1.2 கிமீ


மூலவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சண்முகர், வள்ளி, தெய்வானை

பழமை: 200 ஆண்டுகள்


தலமகிமை:

சேலம் மாநகரில் சேலம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து 1.2 கிமீ தொலைவில் செங்குந்தர் சமூகத்தினர் அதிகம் வாழும் பாவடி பகுதியில் திருமண பிராப்தம் அருளும் செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக கல்யாண சுப்பிரமணிய சுவாமி தேவியருடன் அருள்பாலிக்கின்றார். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை இன்றளவும் செங்குந்தர் சமூகத்தினர் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் முருகப்பெருமான் பெருங்கருணையினால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது விசேஷம்.


இத்திருக்கோவிலின் முக்கிய திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். 7 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் விர்தமிருந்து, தினமும் நடைபெறும் ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் சமர்ப்பித்து நற்பலன் பெறுகின்றனர். கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருமணம் வேண்டுவோருக்கு திருமண பிராப்தம் அருள்கின்றார். வேண்டிய வரங்களை நிறைவேற்றுகின்றார். 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 7-ம் நாள் காலை கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் மிகப் பெரிய அளவில் நடக்கின்றது. இக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை திருக்கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இரண்டாவது திருக்கல்யாணம் ஆவணி மாதம் வருஷாபிஷேகத்தின் போது நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான திருநாட்களில் பால்குடம், காவடி, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று திருப்பிரசாதம் அளிக்கப்படுகின்றது. கிருத்திகை, சஷ்டி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.


திருமண வரம் வேண்டுவோர், 6 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு செவ்வரளி மாலை சாற்றினால் திருமணம் பிராப்தம் உடனடியாக நிறைவேறும் என்பது இவ்வூர் பக்தர்களது நம்பிக்கை.


தல வரலாறு:

200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவில் முத்து முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இக்கோவிலில் தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் ஒரு நாள் அறங்காவலர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, இக்கோவிலில் தான் கல்யாண சுப்பிரமணியராக அருள்பாலிப்பதாக கூறியதாக வரலாறு. அதனால் தண்டாயுதபாணி தெய்வத்திற்கு பதிலாக வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டை செய்தனர். அன்றைய தினத்திலிருந்து இத்திருக்கோவில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றழைக்கப்பட்டு வருகின்றது. செங்குந்தர் சமூகத்தினரால் பரமாரிக்கப்பட்டு வரும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் முறையாக நடைபெற்று வருகின்றன.

தல அமைப்பு:

கோவில் கோபுரத்திற்கு முன் சாட்சி விநாயகர் தனி சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகின்றார். முத்துக்குமரர் தனி சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். மேற்கு நோக்கி அமைந்த திருக்கோவில் கோபுரம் வழியே உள்ள நுழைந்த உடன் வேல், பலிபீடம், மயில் ஆகியவை மூலவர் சந்நிதி எதிரில் அமைந்துள்ளன. கருவறை வாசல் சுவற்றில் நவ வீரர்கள் சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன. துவாரபாலகர்கள் கருவறை வாசல் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். கருவறையில் மூலவர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக திருமண கோலத்தில் வேல் தாங்கி நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


மூலவர் வலபக்கம் விநாயகரும், இடப்பக்கம் உற்சவ மூர்த்திகள் சண்முகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வீரபாகு வீற்றிருந்து அருள்புரிகின்றனர். கோஷ்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருளுகின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் அருள்கின்றார். வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கல்யாண மகா கணபதி வடப்பக்கமும், கல்யாண சுந்தரேஸ்வரர் தென்பக்கமும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கோவிலில் நுழைந்தவுடன் இடப்புறம் நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வருஷாபிஷேகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

திருமண பிராப்தம் வேண்டி, சந்தான பாக்கியம் பெற, வியாபாரம், தொழில் மேம்பட, வேண்டிய வரம் அளிக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


வேண்டிய வரம் அளிக்கும் சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 691 திருமண பிராப்தம் அருளும் சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 691 வேண்டிய வரம் அளிக்கும் சேலம் பாவடி செங்குந்தர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்