கோவில் 163 - கோயம்புத்தூர் முத்துக்கவுண்டனூர் முத்துமலை முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-163
அழகும் அருளும் நிறைந்த கோயம்புத்தூர் முத்துக்கவுண்டனூர் முத்துமலை முருகன் கோவில்
18.11.21 வியாழன்
அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில்
முத்துக்கவுண்டனூர்
கிணத்துக்கடவு-642109
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: கிணத்துக்கடவு 12 கிமீ கோயம்புத்தூர் 33 கிமீ
மூலவர்: முத்துமலை முருகன்
உற்சவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவிலிருந்து மேற்கே 12 கிமீ தொலைவில் உள்ள முத்துக்கவுண்டனூர் எனும் ஊரில் முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து இந்த மலையின் மீது விழுந்ததால் முத்துமலை என்று பெயர் வந்தது. இத்தலத்தில் முருகன் அழகும் அருளும் நிறைந்தவனாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றிலிருந்து ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள். தைப்பூசத்திருநாளில் வேலுடன் நிற்கும் இத்தல முருகனைத் தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும். பங்குனி உத்திரத் திருநாளில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மாதந்தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடக்கிறது,. இத்திருத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளில் காவடி ஆட்டம், அன்னதானம் நடைபெறுகிறது.
குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து முத்து மலை ஆண்டவனை வேண்டிக்கொள்ள, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், கிருத்திகை தினத்தன்று விரதம் இருக்க வேண்டும். அன்று காலை 6 மணிக்குக் கோவிலில் நடைபெறும் பாலபிஷேக பூஜையில் கலந்துகொண்டு, பூஜை முடிந்ததும், சந்நிதியில் இருந்து தரப்படும் வேலாயுதத்தைப் பெற்றுக்கொண்டு, திருக்கோவில் வெளிப் பிராகாரத்தை மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும். இது போன்று தொடர்ந்து ஆறு கிருத்திகைகளுக்கு இங்கு வந்து வழிபட, விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.
தலவரலாறு:
முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வரும்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காகக் கீழே இறங்கியவர், இம்மலையில் கால் பதித்ததால் இது ‘முத்துமலை‘ என்றாகி விட்டது.
ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி,”இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில்தான் நான் சிலை வடிவில் இருக்கிறேன்” என்றார். இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. மேலும், தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும், அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகுதான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன்மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து, முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தல அமைப்பு:
இவ்வாலய கருவறையில் மூலவராக நிறைந்த அழகுடன் முத்துமலை முருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உற்சவராகவும் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம் (திருத்தேர் உலா) கந்த சஷ்டி, தமிழ் வருட பிறப்பு,, பிரதி கார்த்திகை, திங்கள், வெள்ளி
பிரார்த்தனை:
வினைகள் அகன்றிட, நினைத்த காரியங்கள் நிறைவேறிட, மனதுக்கு நிம்மதி, தெம்பு பெற்றிட, திருமணத்தடை நீங்கிட, குழந்தை பாக்கியம் கிட்ட, நாக தோஷம் நீங்க
நேர்த்திக்கடன்:
காவடி ஆட்டம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், திருப்பணி பொருளுதவி, அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30 முதல் இரவு 7.30 வரை
முத்துமலை முருகனை மனமுருகி வேண்டினால் நமது வினைகள் யாவையும் அகற்றி அருள் புரிந்திடுவார்!
!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - முருகப்பெருமான் கிரீடத்திலிருந்து முத்து உதிர்ந்த தலமான முத்துமலையில் முருகன் அருள்பாலிக்கும் கோவில்
படம் 2 - மனதுக்கு நிம்மதியும் தெம்பும் தந்தருளும் முத்துமலை முருகன்
Muthumalai muruganuku Arohara. Thanks for this post Iya.
ReplyDelete