கோவில் 157 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-157
கர்ம வினை நீக்கும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில்
12.11.21 வெள்ளி
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்
கதித்தமலை
ஊத்துக்குளி-638751
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 15 கிமீ
மூலவர்: வெற்றி வேலாயுதன்
அம்மன்: வள்ளி, தெய்வானை (தனி சந்நிதி)
தீர்த்தம்: முருகன் உண்டாக்கிய தீர்த்தம் (மலை மீது)
பாடியவ்ர்: அருணகிரிநாதர்
தலமகிமை:
திருப்பூரிலிரிந்து 15 கிமீ தூரத்தில் கர்ம வினை நீக்கும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் வெற்றி வேலாயுதசுவாமியாக அருள்பாலித்து வருகிறார். அகத்தியர் பூஜித்த பெருமை பெற்ற தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
கோவிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி தனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை இருவரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்., சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய தேவியர், இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். வேலன் அருளாசியின்படி தெய்வானை இந்திரனின் மகளாகவும், வள்ளி நம்பிராஜனின் வளர்ப்பு மகளாகவும்அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சந்நிதிகள் தரப்பட்டுள்ளன.
மேலும் ஒரு காரணமும் சொல்லப்படுகின்றது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என்னும் மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரப்பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோவில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கமும் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்திதான் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது. தென்னகத்தில் எங்கும் இல்லாத வகையில் இந்த கோவிலில் மரச்சிற்பத்தினால் செய்யப்பட்ட தேர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலை சுற்றி வலம் வருவதும், முருகப்பெருமான் தேர் மீது வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்
தலவரலாறு:
முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக்கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென்றார். அவருடன் நாரதர் மற்றும் பல தேவர்களும் உடன் வருகின்றனர். ஓரிடத்தில் பூஜைக்குரிய நேரம் வந்ததும் அகத்தியர் முருகப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கும் தாகம் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு உடனே தோன்றினார். தனது வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப்பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் “ஊத்துக்குளி‘ என அப்பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோவிலும் கட்டப்பட்டது
தல அமைப்பு:
கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. ராஜகோபுரத்தின் முன்னால் தீபஸ்தம்பம் உள்ளது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு சந்நிதி உள்ளது. மூலவராக வெற்றி வேலாயுதசுவாமி கருவறையில் தனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் மேற்கு பகுதியில் தேவியர் வள்ளி தெய்வானை தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
முருகப்பெருமானின் கோவிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோவில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
மலையின் வடசரிவில் சிவபெருமானின் காளை வாகனத்திருவடியும் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் சுப்பராயர் சந்நிதி என்னும் புற்றுக்கோவிலும் உள்ள நாகதோஷம், ராகு- கேது தோஷம் நீங்க பக்தர்கள் வழிபாடுகள் செய்கின்றனர். வள்ளி, தெய்வானை சந்நிதிக்குச் செல்லும் வழியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பாலை மரத்தினடியில் சுக்குமலையான் சந்நிதி உள்ள இப்பாலை மரத்தில் துணியால் தொட்டில் கட்டினால், மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. தைப்பூசத்திற்கு அடுத்த நான்காம் நாள் மலைமீது கோவிலைச் சுற்றி மரத்தேரோட்டம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
திருவிழா:
தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்
பிரார்த்தனை:
கர்ம வினை நீங்க, அனைத்து தோஷங்கள் நீங்க, திருமணத்தடை அகல், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, மகப்பேறு கிடைக்க,
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
தோஷங்கள் அனைத்தையும் நீக்கிடும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கத்தித்தமலை கந்தனின் பாதங்கள் நம்மை கனவிலும் காக்கும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் pH. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கர்ம வினை நீக்கும் கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம்
படம் 2 - கத்தித்தமலை கந்தன் பாதம் நம்மை கனவிலும் காக்கும்
Kathithamalai muruganuku arohara. Thanks for this post Iya.
ReplyDelete