கோவில் 144 - மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-144
பயந்த சுபாவத்தை போக்கியருளும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
30.10.21 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
புத்தூர்
உசிலம்பட்டி–624706
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை 38 கிமீ. உசிலம்பட்டி 2 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
புராணப்பெயர்: குமார கோவில்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
தலப்பெருமை:
மதுரை-உசிலம்பட்டி சாலையில் மதுரையிலிருந்து 36 கிமீ உசிலம்பட்டி உள்ளது அங்கிருந்து 2 கிமீ தொலைவில் பயந்த சுபாவத்தை போக்கியருளும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம் மற்றும் மிக சிறப்பு.
இக்கோவிலில் விசேஷமான தாணுமாலய லிங்கம் இருக்கிறது. ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டுமே இருக்கும் இந்த லிங்கத்திற்குள் சிவபெருமான், திருமால், பிரம்மா ஆகிய மூவருமே ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம். அகத்தியர் பெருமானுக்காக மும்மூர்த்திகளும் இவ்வாறு காட்சி தந்தனர். இதனால், "அகத்திய லிங்கம்' என்றும் இதற்கு பெயருண்டு. கோவில் வளாகத்திலுள்ள இலுப்பை மரத்தின் கீழ், காவல் தெய்வம் முனீஸ்வரன் அரூபமாக (உருவமின்றி) அருளுகிறார்.
தலவரலாறு:
நாகாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாகாசுரன் மக்களின் உடைமைகளை சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீர தண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு வந்தார். நாகாசுரனை மறித்த முருகன், ""அடேய்! நீ செய்வது தவறு. எனவே, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடு,'' என எச்சரித்தார். முருகப்பெருமான் யாரையும் அவ்வளவு எளிதில் அழிக்கமாட்டார். அவர் கருணைக்கடல். பத்மாசுரனுக்கு கூட அவர் ஞானம் கொடுத்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளவே செய்தார். நாகாசுரனுக்கும் எச்சரிக்கையே விடுத்தார். யாராலும் எதிர்க்க முடியாத தன்னை, ஒரு இளைஞன் துணிச்சலுடன் வந்து எதிர்த்ததால் அவமானமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோவில் கட்டினார். இளைஞனாக வந்ததால், "குமரன்' என்றும், தலத்திற்கு "குமார கோவில்' என்றும் பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் பிற்காலத்தில் "புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது.
.தலஅமைப்பு:
கருவறையில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி தனது இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்தகைய கோலத்தில் முருகப்பெருமானைத் தரிசிப்பது மிக சிறப்பாகும். முதலில் இவர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். அப்போது சுவாமியின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலை பிரதிஷ்டை செய்தனர். தைப்பூசத்தன்று இவருக்கு விசேஷ மகாபிஷேகம் நடக்கும். பிரகாரத்தில் தாணுமாலய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, இரட்டை விநாயகர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர் முனீஸ்வரர் மற்றும் நாகர் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி
பிரார்த்தனை:
பயந்த சுபாவம், மனக்குழப்பங்கள் நீங்கிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை: 5-7
சிறப்பு மிக்க உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் மனமுருக வேண்டிக்கொண்டால் தேவையில்லாத மனகுழப்பங்களை நீக்கி அருளுவார்!.
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பயந்த சுபாவத்தை போக்கியருளும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - மனகுழப்பங்களை நீக்கி அருளும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் சுப்பிரமணிய சுவாமி
Usilampatti puthoor subramania swamiku arohara. Thanks for this post Iya
ReplyDelete