கோவில் 143 - காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமி (முருகன்) கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-143
பேரும் புகழும் அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமி (முருகன்) கோவில்
29.10.21 வெள்ளி
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
பெரும்பேர் கண்டிகை-603301
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: தொழுப்பேடு 1 கிமீ, அச்சிறுபாக்கம் 5 கிமீ
மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: சஞ்சீவி தீர்த்தம்
தலவிருட்சம்: வேப்பமரம் (1000 ஆண்டுகள், கசப்பற்றது)
புராணப்பெயர்கள்: பேறை நகர்,பெறும்பேறு
பதிகம் பாடியோர் அருணகிரிநாதர் (1), பாம்பன் சுவாமிகள் & 19 புலவர்கள்
தலப்பெருமை:
சென்னை-திருச்சி சாலையில் தொழுப்பேட்டிலிருந்து 1 கிமீ தொலைவில் பேரும் புகழும் அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமி (முருகன்) கோவில். அச்சிறுபாக்கத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் இக்கோவிலை அடையலாம்.
அகத்தியர் சிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசித்த தலங்கள் நாடெங்கும் இருந்தாலும், சிவன்-பார்வதி திருமணக் கோலத்துடன் முருகப்பெருமானையும் சேர்த்துத் தரிசித்த சிறப்புக்கு உரிய தலம் பெரும்பேர் கண்டிகை ஆகும். இந்த ஊர் பெயரை பிரித்து படித்தால் பெரும்+பேறு+கண்டிகை இந்த ஊரில் பிறப்பதற்கு பெரும் பேறு செய்திருக்கவேண்டும். பிரம்ம தேவர் அனுதினமும் கந்தனை வழிபடும் தலம். முருகன், அம்பிகையின் சக்தியாக வழிபடப்படும் தலம். சத்ருசம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அபூர்வ தலம்.
பெரும்பேர் கண்டிகை ஒரு கிராமம்தான் என்றாலும் சுமார் 33 திருக்கோவில்களைக் கொண்டு மிகவும் சிறந்த திருத்தலமாக திகழ்கிறது. இவ்வூரை ஒட்டிய சஞ்சீவி மலையில், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கிறார். உயிர் காக்கும் மூலிகைகள் நிறைந்த மலை என்பதால், இந்த மலை சஞ்சீவி மலை ஆகும். மலையடிவாரத்தில் கிராம தேவதையாக இருக்கும் எல்லையம்மன் கோவில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு குலதெய்வமாக அருள்பாலிக்கின்றாள்.
முருகன் கோவில் அடிவாரத்தில், 2,500 ஆண்டுகள் பழமையான செண்பகவல்லி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அரிதான பஞ்சமுக சங்கு சிறப்பு. 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய அகோரபத்திரர் மற்றும் காளிகாம்பாள் சந்நிதிகள், ஆஞ்சநேயர் கோவில், 850 ஆண்டுகளுக்கு முந்தைய கரிவரதராஜ பெருமாள் கோவில், செல்லியம்மன் கோவில் என்று எங்கெங்கு காணினும் கோவில் மயமாகக் காட்சியளிக்கிறது பெரும்பேர் கண்டி.கை. ஒரு முறை தரிசித்து வந்தால் பெரும்பேறு கிடைக்கும்.
இங்கு விசேஷமாக சத்ருசம்ஹார யந்திர ஹோமம், சத்ருசம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன. இவற்றைச் செய்யும்போது எமபயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதீனம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும்” பௌர்ணமி தினங்களில் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் விசேஷம் இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
முருகனின் அறுபடை வீடுகளபோல் மிகவும் சிறப்புவாய்ந்த இத்தலத்தில் நடைபெறும் உற்சவங்களில் இரட்டைமலை உற்சவம் (சஞ்சீவி மலையும் சந்திக்கும் பகுதி) சிறப்பாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அருகில் இருக்கும் இரட்டைமலைக்கு முருகன் எழுந்தருளி, அவ்விடத்தில் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரரை வலம் வந்து காட்சி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது. பெரும்பேர் கண்டிகையில் தவமிருக்கும் அகத்தியருக்குத் தரிசனம் கொடுப்பது கண்கொள்ளாக் காட்சி. வைகாசி விசாகத்தில் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில்
“பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
என்று இந்த்த் தலத்து முருகப்பெருமானை சிறப்பித்து பாடியுள்ளார்.
தல வரலாறு:
கைலாச வாசனின் திருமணத்தின் போது பூமியைச் சமன் செய்ய வேண்டி, சிவபெருமான் கட்டளைப்படி அகத்தியர் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். அப்போது, தாம் விரும்பிய இடங்களிலெல்லாம் சிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசிக்கும் வரத்தைப் பெற்றே புறப்பட்டார். அதன்படி பல திருத்தலங்களில் அகத்திய முனிவர் பெருமானின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவர் இந்தத் தலத்துக்கு வந்தபோது, சிவனாரின் திருமணக் கோலத்துடன் சுப்ரமணிய சுவாமியையும் சேர்த்துத் தரிசிக்கும் விருப்பம் ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு, சிவசுப்ரமணியராக தாய் தந்தையரான சிவ-பார்வதியுடன் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி தந்தார் முருகக்கடவுள். இங்கே, முருகன் ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.
தல அமைப்பு:
கோவிலுக்கு அருகிலிருந்த சஞ்சீவி தீர்த்தத்தில் தூய்மை செய்து கொண்டு, எல்லையம்மனையும், சுயம்புவான பாறை விநாயகரையும், நவக்கிரகங்களையும் வழிபட்டு விட்டு, சுமார் 100 படிகளைக் கடந்ததும் ஆலயத்தை அடைந்துவிடலாம்.
திருக்கோவில் திருச்சுற்றில் தென்மேற்கில் செல்வ சுந்தரவிநாயகரும், வடமேற்கில் சுந்தரவிநாயகரும் அருள்புரிகிறார்கள். கருவறைக்குள் செல்லும்போது அகத்தியர், அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகள் காட்சி தருகின்றனர்.முருகப்பெருமானின் கருவறைக்கு அருகில் காசி விசுவநாதரும் விசாலாட்சி அம்பிகையும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
கருவறையில் முருகர் சிவசுப்ரமணிய சுவாமியாக ஞானகுருவாக புன்னகை தவழ ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டவராய், வள்ளி, தெய்வானையுடன் அற்புத தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார் சிவசுப்ரமணிய சுவாமி. திருக்கரங்களில் வஜ்ரம், அம்பு, வாள், கொடி, கதை, வாள், வில், கேடயம், தாமரை மலர், திரிசூலம் ஆகியவற்றுடன் அபய-வரத அஸ்தம் திகழ, போர்க்கோலத்தில் காட்சியளிக்கிறார். போர்க்கோலம் என்றாலும் முருகனின் திருமுகங்களில் அறக்கருணையே தென்படுகிறது! தேவியர் இருவருடன் தெற்கு நோக்கி கந்தப்பெருமான் காட்சி தருவது மிகவும் விசேஷம்.
முருகப்பெருமானின் திருவுருவத்துக்கு முன்பாக சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சக்திவேலையும் தரிசிக்கலாம். யந்திரத்துக்கும் சக்திவேலுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. ஒவ்வொரு நாளும் பிரம்மதேவர் முருகப்பெருமானை வழிபடுகிறார் என்பதை உணர்த்துவிதமாக சக்திவேலுக்கு அருகில் அன்னப்பறவை காணப்படுகிறது. கருவறை விமானத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சுதைச்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
சத்ருசம்ஹார யந்திரம் மற்றும் சக்திவேலின் மகிமைகள்: “முருகப்பெருமானின் ஆறுமுகத்தைக் குறிப்பதைப் போன்று வசியம், ஆகர்ஷணம், உச்சாடனம், மாரணம், மோகனம், தம்பணம் என்று ஆறு பகுதிகளால் ஆன சக்தி வாய்ந்த யந்திரம் இது. அகத்தியருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த காலத்திலிருந்தே இந்த யந்திரம் வழிபடப்பட்டு வருகிறது. முருகனுக்கு முன் இருக்கும் வேலுக்கு ‘சக்தி வேலாயுதம்’ என்று பெயர். வேலாயுதம் அம்பாளின் அம்சமாகவே வழிபடப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு மட்டும் வேலாயுதத்துக்குச் சிறப்பு வழிபாடாக ‘25 மூல மந்திர பீஜாக்ஷர அர்ச்சனை’ செய்யப்படுகிறது.
திருவிழா:
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், மாசிமகம், கந்தசஷ்டி, தைப்பூசம்
பிரார்த்தனை:
எம பயம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, கல்வி, ஞானம் பெருக, நினைத்த காரியம் நிறைவேற
நேர்த்திக்கடன்:
சத்ருசம்ஹார யந்திர ஹோமம், சத்ருசம்ஹார திரிசதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 8-12 மாலை 5-7
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமியை வேண்டிக்கொள்வோம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பேரும் புகழும் அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமி
படம் 2 - நினைத்த காரியங்களை நிறைவேற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பேர் கண்டிகை சிவசுப்ரமணிய சுவாமி பிரதான வேல்
Peruper kandigai sivasubriamania swamiku arohara. Thanks for this post Iya.
ReplyDelete