கோவில் 448 - செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்

 🙏🙏 

தினம் ஒரு முருகன் ஆலயம்-448

இகபர சுகம் அருளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்

30.8.2022 செவ்வாய்

அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில்

மதுராந்தகம்-603306

செய்யூர் தாலூகா

செங்கல்பட்டு மாவட்டம்

இருப்பிடம்: சென்னை 75 கிமீ, மதுராந்தகம் பேருந்துநிலையம் அருகில்


மூலவர்: ஆறுமுகசுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

ஈசன்: பாண்டீஸ்வரர்

பாடல்: அருணகிரியார் திருப்புகழ் (1 பாடல்).


தலமகிமை:

சென்னையிலிருந்து 75 கிமீ தொலைவிலுள்ள மதுராந்தகம் பகுதியில் இரண்டு திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன.

1. மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஆறுமுகசுவாமி திருக்கோவில்

2. புலிப்பரக் கோவில் எனும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (இதுவே 'வடசிற்றம்பலம்' எனும் தலமுமாகும்).


வெகு காலமாக மதுராந்தகம் முருகன் ஆலயமே வட சிற்றமபலம் என்று தவறாகக் கருதப்பட்டு வந்தது, திரு வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய ஆய்வினால் 'வட சிற்றம்பலம்' எனும் தலம் ‘புலிப்பரக் கோவிலில் அமைந்துள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயமே' என்று கண்டறியப் பெற்றுள்ளது.


இனி மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில் குறிப்புகளைக் காண்போம். இந்த ஆலய வளாகம் முழுவதிலும், இத்திருக்கோவிலை வட சிற்றம்பலம் என்றே தவறாகக் குறித்துள்ளனர். திருச்சுவற்றிலும் வட சிற்றம்பலத் திருப்புகழே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோவில் பாண்டீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மதுராந்தகம் என்று நினைத்தவுடன் ஏரிகாத்த ராமர் மற்றும் கடப்பேரி கந்தனையும் தரிசித்து வணங்க வேண்டும். மேலும் வடச்சிற்றமபலத்து ஈசன் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில் வரும் பக்தர்கள் புலிப்பரக் கோவிலில் அமைந்துள்ள திருப்புகழ் தலமான வியாக்ரபுரீஸ்வரர் கோவிலையும் தரிசிக்க வேண்டும்.


அருணகிரிநாதர் இத்தலத்திற்கென அருளியுள்ள திருப்புகழ் திருப்பாடலில்

:மனைமாண்சுத ரான சுணங்கரு

மனம்வேந்திணை யான தனங்களு

மடிவேன்றனை யீண அணங்குறு. வம்பராதி

………….

……………

மதுராந்தக மாந கரந்திகழ்

முருகாந்திர மோட மரும்பர்கள். தம்பிரானே”

என்று போற்றிப் பரவுகின்றார்.


தல வரலாறு:

ஆதிக் காலத்து முருகப்பெருமானை நோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருப்புகழ் பாடி பெருமை படுத்தியுள்ளார். ஆதி மூலவர் சிலை சிதிலமடைந்ததால், புதிய ஆறுமுகசுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, ஆதி மூலவர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.


தல அமைப்பு:

திருக்கோவில் மூலஸ்தானம் கருவறையில், திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள், ஆறுமுகசுவாமி என்ற திருப்பெயருடன் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க அற்புதமாய் திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆதியில் அமைந்திருந்த, அருணகிரியாரால் பாடல் பெற்றுள்ள மூல மூர்த்தியின் திருமேனி சிறிது பின்னப்பட்டு விட, புதியதொரு திருமேனியைச் செய்வித்துப் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதி மூலவரை அருகில் ஒரு சிறு ஆலயம் போன்ற அமைப்பில் எழுந்தருளச் செய்துள்ளனர். ஆலய வளாகத்தில் அருணகிரிநாதர். வள்ளலார் ஆகிய இரு அருளாளர்களும் ஒரே சந்நிதியில் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்


பிரார்த்தனை:

இகபர சுகம் வேண்டி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, மனம் தெளிவடைய


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 8-10 மட்டும்


நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமியை அனைவரும் தரிசிக்க வேண்டும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - இகபர சுகம் அருளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்



படம் 2 - நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்

Comments